Monday, August 31, 2009

கனவினைக் குழைத்தொரு



அவனுக்குக் குழப்பமாயிருந்தது. எப்படி இப்படி? தலை விண்விண்ணென வலியைக் கிளப்பிக் கொண்டிருந்தது. இது மப்புத்தான். ஆனால் எப்படி? அவனுக்கு சுத்தமாக நினைவிற்கு வரவில்லை. யாருடன் சென்றிருப்பான் எனக் குழப்பமாயிருந்தது. நிச்சயமாக இது பியராக இருக்க முடியாது. அவனது பிரியத்திற்குரிய ரைகர் பியர் ஒருபோதும் இப்படியான ஒரு போதையைத் தந்ததில்லை. இது வேறு. எல்லாமே குழம்பிப்போன நிலை. அழைத்துச் சென்றவன் வேறு ஏதேனும் 'பெரிசு' கலந்து தந்திருப்பானோ?. இல்லையில்லை. இது கனவு. வெறும் கனவு மட்டுமே. இது நிஜமெனில் கூட வந்தவனையாவது அவன் நிச்சயம் நினைவில் வைத்திருந்திருப்பான். மழைக்கால இருட்டென்றாலும் மந்தி கொப்பிழக்கப் பாயாது என்பதற்கு இன்றுவரை அவன் உதாரணமாய் இருந்தவன். ஆக இது கனவே தான். கனவில் மட்டுமே சம்பந்தாசம்பந்தமில்லா நிகழ்ச்சிகள் வரும். அவன் இதைக் கனவென்றே நம்பத் தொடங்கினான்.

கனவென்பது மனதிற்கு உறுதியானதும், கனவிலேயே அவன் தான் குடித்திருக்கின்றேனா என்பதை உறுதிப்படுத்த விரும்பினான். எழுந்து நடந்தான். உடல் இலேசாகியிருந்தது போன்ற உணர்வு. மெல்ல வீதியைக் கடந்து நடைபாதையில் நடந்தவன் எதிர்பாராத விதமாய் எதிரே வந்தவருடன் மோதிக்கொண்டான். பலத்த இடி முன்நெற்றியில். தடவிவிட்டுக் கொண்டான். வலி அடங்குவதாய்த் தெரியவில்லை. கனவென்றால் இப்படி வலிக்காதே. ஒருவேளை இது நிஜமோ? தன்னைத்தானே கையில் கிள்ளிக் கொண்டான். வலிமட்டுமல்லாது கிள்ளிய இடம் கன்றிப்போய் இருந்தது. அப்படியானால் இது கனவல்ல. இது நிஜமென்று இப்போது நினைக்கத் தொடங்கினான்.

வயிறு பசித்தது. சற்றுத் தொலைவில் சாப்பாட்டுக்கடை தெரிந்தது. அருகே செல்ல ஊதுவத்தி வாசனை மூக்கைத் துளைத்தது. இருக்கையில் அமர முன்னுக்கிருந்தவர்கள் கையை உதறி விட்டு எழுந்தார்கள். பணியாளுடன் பிரச்சனைப்பட்டுக் கொண்டே கல்லாவை நெருங்கியவர்கள். “தோசையின்ர திறத்தில ஆட்டுக்கல்லுக்கொரு மாலை” என்று கோபமாகத் திட்டியவாறே வெளியேறினார்கள்.

அவன் ஆட்டுக்கல்லைப் பார்த்திருக்கிறான். அதில் தோசைக்கு மாவாட்டியுமிருக்கிறான். மாலை போடப்பட்டிருந்த ஆட்டுக்கல்லை உற்று நோக்கினான். அது ஆட்டுக்கல்லல்ல. அவனுக்கது உறுதியாய்த் தெரிந்தது. ஆட்டுக்கல்லின் வடிவில் அமைந்தவொரு உருவம். அந்த உருவத்தை அவன் முன்னரும் பார்த்திருக்கிறான். அந்த உருவத்தைப் பற்றி அவன் புத்தகங்களிலும் வாசித்திருக்கிறான். சட்டென எதுவும் நினைவிற்கு வரவில்லை. அவனுக்கு அங்கிருக்கப் பிடிக்கவில்லை. எழுந்து மீண்டும் நடக்கத் தொடங்கினான்.

இப்போது அவனுக்கு சந்தோசமாயிருந்தது. அது பற்றிய சிறுகுறிப்பொன்று அவன் நினைவிற்கு வந்து விட்டது. அதைப் பற்றிக் கண்ணதாசனின் நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது கலவி நிலையைக் குறிக்கும் ஒரு குறியீடு. புணர்ச்சி நிலையை எதற்காய் ஒரு குறியீட்டால் காட்டவேண்டும். பின் எதற்காய் அதற்கு மாலை போடவேண்டும். ஆகா! அங்கே ஏதேனும் சக்தி ஒளிந்து கிடக்கிறதோ? அதுதானே! புதிதாய் ஒரு ஜீவனை வேறெந்தக் கருவிகளால் உண்டாக்க முடியும்? ஏதோ புரிவது போலவும் புரியாதது போலவும் தோன்றியது. குழப்பம் மறுபடி கூடுவதாய்த் தோன்றியது. இது கனவா இல்லை நனவா என்கின்ற சந்தேகம் மீண்டும் முளைத்தது. இரண்டு பியர் அடித்துவிட்டுப் பேசாமல் போய்ததூங்கி விடலாம் என்றது மனது.

அவன் நடந்து சென்ற பாதையிலேயே அவன் வழக்கமாகச் செல்லும் அந்தக் கடையும் இருந்தது. அவன் தனது வழமையான இருக்கையில் அமர்ந்ததுமே தனது வாடிக்கையாளரைக் கண்டுவிட்ட அந்த இளம்பெண் அவனுக்குப் பிரியமான ரைகர் பியருடன் அவனை நெருங்கினாள். என்றுமில்லாதவாறு இன்று அவள் மிகவும் கிளர்ச்சியூட்டுபவளாய்த் தெரிந்தாள். 'கறந்த இடம் கண்நாட பிறந்த இடம் மனம் நாட...'

ச்சே! எனக்கு என்னவோ ஆயிற்று அவன் மிகத் தீவிரமாகக் குழம்பினான். இது கனவா நிஜமா? எப்படி உறுதிப்படுத்துவது? அந்தப் பெண்ணிடமே ஒரு வெற்றுத்தாளும் ஒரு பேனையும் கொண்டுவருமாறு கேட்டுக் கொண்டான். இப்போது அவனுக்குத் திருப்தியாய் இருந்தது. இது நிஜமெனில் தான் எழுதுவதே ஒரு படைப்பாய் மாறக்கூடும் என அவன் நம்பினான். இல்லை இதுவொரு கனவெனில் தூக்கம் கலைந்த பின்னர் எழுதிய தாள் இருக்காதே. ஆகவே இது கனவென்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவன் நினைத்தான். அவன் தன் மனதில் தோன்றுபவற்றை காகிதத்தில் எழுத நினைத்தான்.

பேனாவை ஒருதடவை பார்த்தவனின் பார்வை அதிலேயே பல நிமிடங்களுக்குத் தொடர்ந்தது. இந்த முனைவடிவை வேறெங்கோ பார்த்திருக்கிறேன். அவன் பார்வையில் இப்போது அந்தப் பேனா மறையத் தொடங்கியிருந்தது. திடீரென அது ஒரு துப்பாக்கிக்குண்டின் முனைப்பகுதியாய் அவன் நெஞ்சைக் குறிபார்த்தது. இந்தச் சின்ன ரவை என்னை என்ன செய்யும் என்று எழுந்த அலட்சியம் சில நொடிப்பொழுதுகளிலேயே அமுங்கிப் போனது. இப்போது அது 50 கலிபர் துப்பாக்கியின் ரவையின் அளவிற்கு வளர்ந்து விட்டிருந்தது. அவனுக்குள் பயம் வேர்விடத் தொடங்குகையில் அது ஒரு ஆர்பிஜி எறிகணையின் அளவிற்கு வளர்ந்திருந்தது. அது தொடர்ந்து வளர்ந்து கொண்டேயிருந்தது. இப்போதைய அதன் பரிமாணத்தை அவன் தன் சின்ன வயதில் பார்த்திருக்கிறான். 50 கிலோகிராம் எடையுள்ள வெடிக்காத நிலையில் மீட்கப்பட்ட விமானத்திலிருந்து வீசப்பட்டவொரு குண்டினை அவன் 1985ஆம் ஆண்டு காலப் பகுதியில் யாழ்/புனித பததிரிசியார் கல்லூரியில் இடம்பெற்ற கண்காட்சியில் பார்த்திருக்கிறான். பின்நாட்களில் அதை விடப் பாரிய பலமடங்கு எடையுள்ள விமானக்குண்டுகளைப் பார்த்திருந்தாலும் அந்த வடிவத்தில் அவன் பார்த்திருந்த மிகப் பெரிய குண்டு அதுவாகவேயிருந்தது. எனவே இதைவிடப் பெரிதாக அந்தப் பேனா வளரமுடியாது என்கின்ற அவன் கணிப்பைப் பொய்யாக்கி அது மேலும் வளரத் தொடங்கியது.

ஒருவேளை அணுகுண்டு இந்தளவாக இருக்குமோ என்று அவனுள் எழுந்த அனுமானத்தின் அளவுடன் ஒப்பிடுகையில் அந்தப் பேனா சிறிதாகவேயிருந்தது அவனுக்கு ஆறுதலைத் தந்தது. ஆயினும் அது தொடர்ந்து வளர்ந்து அவன் கற்பனையைத் தகர்க்க அவன் உடையத் தொ்டங்கினான். இப்போது அந்தப் பேனாவைப் பார்க்கையில் அதன் முகப்புத் தோற்றம் ஒரு பாரிய விமானத்தின் முகப்பைப் போல் தோன்றியது. இன்னொரு பார்வையில் அதுவொரு நீர்மூழ்கிக் கப்பலின் முகப்பை ஒத்திருந்தது. எப்படியெனினும், தன்னால் வளர்ந்துகொண்டிருக்கும் அந்தப்பேனாவை, தான் அறிந்த வேறொரு பொருளுடன் ஒப்பிடக்கூடியதாயிருப்பதில் அவனுக்குள் ஒருவகை திருப்தியும் சந்தோஷமுமே காணப்பட்டன.

அந்தப் பேனாவை அற்பமாய்ப் பார்த்தான். அது இப்போது விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது. முடியாது. இதற்குமேல் இதனுடன் ஒப்பிட்டுப் பார்க்கவோ கற்பனை பண்ணிப்பார்க்கவோ அவனால் முடியாது என்பதை உணரத் தொடங்கினான்.

விஸ்வரூபமாய் விரிவடைந்திருந்த பேனா இப்போது அவனை இந்தப் பேரண்டத்தின் ஒரு கோடிக்குள் தள்ளிவிட்டு எங்கும் நீக்கமற விரிவடைந்திருப்பதாய் உணர்கையில் அவன் உருகத் தொடங்கியிருந்தான். அவனுக்குள் ஏற்கனவே உருவாக்கி வைத்திருந்த ஒப்பீடுகளும் எல்லைகளும் உடைந்து சிதறின. அவன் நாபிக்கமலத்திலிருந்து புறப்பட்டு “ஓம்” என்றவாறே அகிலமெங்கும் அதிர்ந்து பரவிய உட்சக்தியுடன் அவன் இலேசாகி, மேலும் இலேசாகி, மேலும் மேலும் இலேசாகி எங்கும் கலக்கத்தொடங்கினான். பின் கரைந்து காணாமல் போனான்.

Monday, August 24, 2009

நினைவுகளில் நீ

முதற்காதலும் முதல்முத்தமும் மட்டுல்ல
முதன்முதலாய் மரிக்கப்பட்ட நட்பும்
மறக்க முடியாதது தான்.

காதலில் தொலைந்தவர்கள் மட்டுமல்ல
நட்பைத் தொலைத்தவர்களும்
கவிதை வரையத் தொடங்கலாம்.

ஜெயந்தா!
அகமகிழ்ந்திருந்தோம்
அஜந்தா ஓவியமாய்
அழியாப் புகழ்பெறுவாயென.

பதின்மப் பருவத்தின்
ஆரம்பப் படிக்கட்டில் நாம்.
உனக்கென்ன வயதப்போ?
பதின்மூன்றா பதின்நான்கா?

பாலகராய்த்தான் நாம்
பள்ளிக்குச் சென்று வந்தோம்.
பாதகர்கள வந்தார்கள். எம்மைப்
பரிதவிக்கச் செய்தார்கள்.

கொடியபடை பாதைகண்டு
விலகிவிட நின்ற உந்தன்
முன்னிருநாள் பசியறிந்த
சிற்றன்னை கஞ்சி தந்தாள்.

கஞ்சி வாயில் வைக்கவில்லை,
கயவர் வாயில் வந்து விட்டார்.
ஓடச்சொல்லிப் பணித்துவிட்டு
சடசடத்தது அவர் துப்பாக்கி.

ஓட்டப் பந்தயத்தில்
எப்போதும் நீ முதலிடம்தான்.
வெற்றிக்கம்பம் தாண்டிக்கூட
களைத்து நீ வீழ்ந்ததில்லை.

இம்முறை நீ வீழ்நதாயாம்.
வீழ்ந்தபின் எழவேயில்லையாம்.
நீ மட்டுமல்ல உன் அயலவர்கள்
எல்லேர்ரும் உன்னுடன் தானாம்.

சேதி அறிகையில் நெஞ்சு துடித்தது.
ஆதி மூலமோ அறியாத் துயிலிலாம்.
ஆரொடு நோவோம்? ஆர்க்கெடுத்துரைப்போம்?
வேரொடு பிடுங்கி, வீசப்பட்ட எம்வாழ்க்கை

உடல்கள் அழியலாம் கொண்ட
உறவுகள் அழிவதில்லை. நீ
மறைந்தாலும் உன் நினைவுகள்
மறைவதில்லை.

(24-08-1990 அன்று வேலணையில் சிறிலங்காப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட இன்பநாயகம் ஜெயந்தனின் 19ம் ஆண்டு நினைவாகவும் அன்றைய தினத்தில் படுகொலை செய்யப்பட்ட ஏனையவர்களுக்காகவும்)

Saturday, August 22, 2009

அந்த மூன்று நாட்களும், சிந்திய குருதியும் அதன் பின்னான விளைவுகளும்.



அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்கின்ற பழமொழியினையோ அல்லது ஆவிகள் பழிவாங்குவதைப் பற்றியோ நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அன்றைய பொழுதும் வழமை போன்றே விடிந்தது. காகங்கள் கரைந்திருந்தன. சேவல்கள் அதிகாலையிலேயே கூவிவிட்டிருந்தன. காலைக்கடன்களை முடித்துவிட்டு வந்து அன்றைய தினநாட்காட்டியில் தேதியினைக் கிழித்தேன்.

ஆவணி 22, 1990

தேநீர் பருகுவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த வேளையில்தான் அந்தச் சத்தங்கள் எம்செவிகளை வந்தடையத் தொடங்கியிருந்தன. தூரத்தில் கேட்டுக்கொண்டிருந்த அந்தச் சத்தங்கள் யாரோ இந்தக் காலை வேளையில் விண்கட்டிப் பட்டம் பறக்க விடுகிறார்களோ என்கின்ற சந்தேகத்தையே ஆரம்பத்தில் எழுப்பியிருந்தாலும், அதனுடன் சேர்ந்து கேட்ட உலங்குவானூர்தியின் சத்தம் அட்ரீனலின் சுரப்பியினைத் தூண்டி விட்டிருந்தது. பொம்மர் என்று அழைக்கப்படும் சியாமாசெட்டி ரக குண்டுவீச்சு விமானங்களின் ஓசையுடன் உலங்குவானூர்திகளின் ஓசையும் கேட்கவே புரிந்து விட்டது, எங்கோ தாக்கப்போகிறார்கள் என்பது. பெரும்பாலும் மக்கள் அதிகம் நடமாடும் சந்திகளில் தான் குண்டுவீச்சுக்கள் நடைபெறும் என்கின்ற பட்டறிவு ஏற்கனவே இருந்ததாலும் எங்களின் வீடும் வங்களாவடிச் சந்திக்கு அண்மையில் இருந்ததாலும் உடனேயே நாங்கள் அனைவரும் பதுங்கு குழிகளுக்குள் சென்று விட்டோம்.

தொடர்நது சில நிமிடங்கள் வட்டமிடுவதை ஓசையில் இருந்து அறிந்து கொள்ளக்கூடியதாய் இருந்தது. திடீரென மிகுந்த வீச்சுடன் விமானங்கள் ஒலிஎழுப்ப “றேஸ் பண்ணுறான். எங்கையோ குத்தப்போறான். காதைப்பொத்துங்கோ” எனக்கேட்ட குரல் தொடர்ந்து எழும்பிய பாரிய வெடியோசைக்குள் கரைந்து போனது. அடுத்தடுத்து நான்கு குண்டுகளை வீசிவிட்டு விமானங்களின் ஒலி மறையவே உலங்குவானூர்திகள் தங்கள் கைவரிசைகளினை 50 கலிபர் துப்பாக்கிகளினூடாகக் காட்டத் தொடங்கியிருந்தன. ஏறத்தாழ ஒரு மணி நேர இடைவேளையின் பின் ஓசைகள் அடங்கியிருக்கவே பதுங்கு குழியினை விட்டு வெளியே வந்தோம். வந்து சிறிது நேரத்திலேயே மீண்டும் உலங்குவானூர்திகளின் ஓசை நெருங்கவே மீண்டும் பதுங்கு குழியினைத் தஞ்சமடைந்தோம். அன்றைய பொழுது பதுங்கு குழிக்குள்ளேயே கழிந்தது.

அது யாழ் கோட்டைக்குள் இருந்த சிறிலங்கா படையினர் சுற்றிவளைக்கப்பட்டு முற்றுகையிடப்பட்டிருந்த காலம். ஆகவே வேலணையில் எமது பகுதிகளிலும் சிறிலங்காவின் விமானப்படையினர் இடையிடையே வான்வழித் தாக்குதல்களை நடாத்திக் கொண்டிருந்தனர். ஆனால் முன்னெப்போதும் இல்லாத வகையில் அன்றைய நாள் பூராவும் விமானப்படை விமானங்கள் எம்மை பதுங்குகுழிகளுக்குள் முடக்கியிருந்தனர். அன்றைய இரவும் அடிக்கொரு தடவை நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களால் வீடுகளிற்குள் நிம்மதியாக உறங்க முடியவில்லை.

மறு நாள் காலையும் விமானப்படையின் குண்டு வீச்சு விமானங்கள் வந்து தங்கள் கடைமைகளைச் செய்திருந்தன. ஆயினும் முதல் நாளைப் போலல்லாது இடையே சில மணித்தியாலங்கள் நீடித்த அமைதியில், ஊர்காவற்றுறையில் சிறிலங்காப் படையினர் தரையிறக்கப்பட்டு முகாம் அமைத்திருக்கின்றார்கள் என்பதை அறிய முடிந்தது. வீட்டின் யன்னல் கண்ணாடிகள் யாவும் நொறுங்கி வீட்டிற்குள் கால்வைக்க முடியாதபடி செய்திருந்தன. வீட்டுச் சுவர்களில் விரிசல்களைக் காணமுடிந்தது. கூரையோடுகள் விலகி நீக்கல்களை ஏற்படுத்தியிருந்தன. முந்தைய தினப் பட்டினி வேறு வயிற்றைக் கிள்ளியது. அவசரஅவசரமாக உணவு சமைக்கப்பட்டுக் கொண்டிருக்கையிலேயே மீண்டும் விமானங்கள். உடனேயே பதுங்குகுழி. விமானச் சத்தங்கள் குறைந்ததும் மீண்டும் சமையலறை என்றவாறாக ஒருமாதிரி அன்றைக்கு எங்களால் உணவு உட்கொள்ள முடிந்திருந்தது. அன்றைய இரவில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட எறிகணை வீச்சுக்களை அடுத்து அன்றைய இரவையும் பதுங்குகுழியிற்குள்ளேயே கழிக்க வேண்டிய நிலை. தொடர்ச்சியாக நடத்தப்படுகின்ற குண்டுவீச்சுக்களாலும் எறிகணை வீச்சுக்களாலும் எத்தனைபேர் பாதிக்கப்பட்டார்களோ என்கின்ற கவலைவேறு.

மறுநாள் பொழுதும் விடிந்தது.

அது 1990 ஆவணி 24ம் திகதி.

கடந்த இருநாட்களிலும்விட அதிகமான விமானங்களினதும் உலங்குவானூர்திகளினதும் இரைச்சல்கள் காதைக் குடைந்தன. குண்டுத்தாக்குதல்களால் பதங்குகுழியே அதிர்ந்தது. பின் பத்து மணியளவில் குண்டுவீச்சு விமானங்களின் ஓசை குறைந்துவிட உறுமிஉறுமியவாறே உலங்குவானூர்திகள் வட்டமிட்டுக் கொண்டும் இடையிடையே 50 கலிபர்களால் சடசடத்துக் கொண்டுமிருந்தன. மாலை மங்குகையில் யாவும் அமைதியாகி விட்டிருந்தது. பதுங்குகுழிகளை விட்டு வெளியே வந்து அயலவர்களுடன் உரையாடத் தொடங்கிய போதுதான் அதிர்ச்சி அலைகள் பரவத் தொடங்கின.

திரிவிடபலய என அழைக்கப்படும் முச்சக்தி படை நடவடிக்கையாக, சிறிலங்காவின் அந்நாளைய நட்சத்திரத் தளபதிகளான அப்போதைய வடமாகாண படைத்தளபதி மேஜர் ஜெனரல் டென்சில் கொப்பே கடுவ, மற்றும் யாழ்மாவட்டப் படைத்தளபதி பிரிகேடியர் விஜய விமலரட்ண ஆகியோரின் நேரடி வழி நடத்தலில் ஊர்காவற்றுறையில் தரையிறக்கப்பட்டு இருநாட்கள் நிலை கொள்ள வைக்கப்பட்டிருந்த சிறிலங்காப் படையினர் கரம்பன், நாரந்தனை, சரவணை, பள்ளம்பலம், வேலணை, சாட்டி, மண்கும்பான் வழியாக அன்றைக்கே அல்லைப்பிட்டியை அடைந்திருந்தனர். அவர்கள் சென்ற வழிகளில் இருந்த கிராமங்களையெல்லாம் சிதைத்து அழித்திருந்தனர். அகப்பட்டவர்களையெல்லாம் சுட்டும் வெட்டியும் கொன்று விட்டிருந்தனர் பலரை இறந்துவிட்டதாக எண்ணிக் காயங்களுடனேயே வெளிகளுக்குள்ளும் பற்றைகளுக்கும் விட்டுச் சென்றிருந்தனர். உறவினர்கள் தங்கள் காயப்பட்ட உறவுகளையும் கொல்லப்பட்ட சடலங்களையும், வேலணை அராலிப் பகுதியில் இராணுவத்தினர் சென்ற பாதையின் அருகேயிருந்த காணிகளுக்குள்ளும் பற்றைகளுக்குள்ளும் தேடியெடுத்துக் கொண்டிருந்தனர். அன்றைய பொழுதினில் மட்டும் சிறுவர்கள் உட்பட 350 வரையிலான அப்பாவிப் பொதுமக்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டிருந்தனர். பலர் கைதுசெய்யப்பட்டுக் கொண்டுசெல்லப்பட்டுமிருந்தனர். அதைத் தவிரவும் வேலணை மேற்குப் பிரதேசத்திலும், சாட்டி மாதா கோவில் மீதும் மேற்கொள்ளப்பட்ட விமானக்குண்டு வீச்சுத் தாக்குதலிலும் ஏராளமான பொதுமக்கள் காயமடைந்தும் கொல்லப்பட்டுமிருந்தனர். (மறுநாள் ஆவணி 25ம் நாள் சிறிலங்கா இராணுவத்தினர், வேலணைத் தீவினை அடுத்திருந்த மண்டைதீவிற்குள் நுழைந்திருந்தனர். அங்கே அவர்களால் ஏற்படுத்தப்பட்ட இழப்புகள் சொல்லி மாளாதவை.)

தொடர்ந்து வந்த நாட்களில் ஊரைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலானோர் இடம்பெயரவும் புலம் பெயரவும் வேலணை வெறிச்சோடத் தொடங்கியது. பின் 1990 புரட்டாதி 26 இல் யாழ்கோட்டையிலிருந்து பின்வாங்கிய படையினர் மண்டைதீவில் தரித்திருந்து பின் 1990 புரட்டாதி 28ஆம் நாள் தாங்கள் வந்த பாதை வழியே, குண்டுவீச்சுகளை நடாத்திவாறே மீண்டும் பின்வாங்கி ஊர்காவற்றுறையைச் சென்றடைந்தனர் பின் மீண்டும் வலம்புரி இராணுவ நடவடிககை மூலம் 1991 இன் நடுப்பகுதியில் தீவகப்பகுதி முழுமையாகப் படையினரால் ஆக்கிரமிக்கப் படுவதற்கு முன்பாக அங்கு வசித்த மக்கள் யாவரும் தங்கள் ஊர்களைவிட்டு வெளியேறியிருந்தனர்.

அது 1992 ஆவணி 08ஆம் நாள்

தீவகப் பகுதியிலிருந்து யாழ்நகரைக் கைப்பற்றுவதற்கான அனைத்துவிதமான ஏற்பாடுகளையும் பூர்த்தியாக்கிவிட்டு, படைநடவடிககையினை ஆரம்பிப்பதற்கு முதல்நாள். சில இராணுவ வாகனங்களில் சிறிலங்காவின் வடமாகாண படைத்தளபதி மேஜர் ஜெனரல் டென்சில் கொப்பே கடுவ, மற்றும் யாழ்மாவட்டப் படைத்தளபதி பிரிகேடியர் விஜய விமலரட்ண ஆகிய நட்சத்திரத் தளபதிகளுடன் ஏனைய முக்கியமான தளபதிகளும் இறுதி நேரக் கள யதார்த்தத்தை அறிவதற்காக வேலணை அராலித்துறைக்கு விஜயம் செய்திருந்தார்கள். அனைத்து நடவடிக்கைகளும் திருப்தியளிப்பதாகவே அவர்களுக்குப் பட்டது. அராலிச் சந்திக்கு அண்மையில் அவர்களின் வருகைக்காக உலங்குவானூர்தியொன்று காத்திருப்பதாகத் தகவல் வந்தது.

சற்றேறக்குறைய இரு வருடங்களுக்கு முன்னர் இதே அராலி வெளியில் நூற்றுக்கணக்கான அப்பாவி இளைஞர்களைக் கொன்று குவித்துவிட்டுச் சென்ற அந்த சிறிலங்கா இராணுவத் தளபதிகள் தங்களுக்காகக் காத்திருக்கும் உலங்கு வானூர்தியை நோக்கி ஒரே வாகனத்தில் குதூகலத்துடன் புறப்பட்டார்கள், அவர்களின் வரவிற்காய் ஆவலுடன் காத்திருக்கும் கண்ணிவெடியை அறியாமல்.

இப்போது மறுபடியும் இந்தப் பதிவின் முதற் பந்திக்குச் செல்லுங்கள்.

முள்ளிவாய்க்கால் பற்றி என்கிறீர்களா?

பொறுத்திருந்து பார்ப்போம். தெய்வம் நின்றுதான் கொல்லுமாமே.



*****

பின்குறிப்பு: இந்தப் பதிவு சம்பந்தமான சில தகவல்களைப் பெறுவதற்காக இணையத்தினைத் துளாவியபோது மிக்க அதிர்ச்சியாக இருந்தது. இது சம்பந்தமான தகவல்கள் ஒரே ஒரு தளத்தில் மட்டுமே காணப்பட்டது. அதில் சில தகவல்களும், சில சம்பவங்கள் இடம்பெற்ற நாட்களும் தவறாகக் காணப்பட்டன. பின் வேலணையைச் சேர்ந்த பலரைத் தொடர்பு கொண்டபோதும் அவர்களால் இச்சம்பவம் நடைபெற்ற அந்த மூன்று நாட்களின் திகதிகளையும் சரியாக நினைவுபடுத்த முடியவி்ல்லை. ஈற்றில் நண்பர் ஒருவரின் உதவியுடன் அவரின் உறவினரூடகவே சரியான தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. அந்தச் சம்பவத்தில் அவர் தனது நெருங்கிய உறவுகள் பலவற்றை இழந்திருந்தார். தகவல்களைத் தந்துதவிய அவருக்கும், அவற்றைப் பெற உதவிய நண்பனுக்கும் எனது நன்றிகள்.

Wednesday, August 19, 2009

வேரென நீயிருந்தாய்... (5)

அடர்ந்து படர்ந்திருந்த இருளினைக் கிள்ளிக் கிள்ளிக் கொய்து விட்டது போல் அந்த அதிகாலைப் பொழுதில் மின்கம்பங்களிலிருந்து ஒளியினைப் பெய்துகொண்டிருந்த வீதிமின்விளக்குகளின் வெளிச்சம் இருட்டினைக் காயப்படுத்திக் கொண்டிருந்தது. நானும் புதிதாகசேர்ந்துகொண்ட நண்பர்களுடன் ஆனிமாதத்தின் அந்தச்சனிக்கிழமை அதிகாலைப்பொழுதில் நடந்து கொண்டிருந்தேன். அதிகாலைக் குளிரைக்குறைப்பதற்காகப் பருகியிருந்த தேநீரின் வீரியத்தினை உடல் இழந்து கொண்டிருந்தது. நேரம் எப்படியும் அதிகாலை நான்கரையைத்தாண்டியிருக்கும். எங்களில் யாருடைய கைகளிலும் கடிகாரங்கள் இருக்கவில்லை. ஐந்துலாம்படிச்சந்தியை நெருங்கிய பிற்பாடு வீதிகளில் சுறுசுறுப்புக்காணப்பட்டது. கொழும்பு மாநாகரின் வியாபாரப்பிரதேசமும் நிறைஅழுக்குப்பிரதேசமுமான 'பெற்றா'விற்குள்ளால் நடந்து கொண்டிருந்தோம். கூடவந்தவர்களில் ஒருவன் அன்றுதான் வாழ்க்கையிலேயே முதன்முதலாக பாட்டா (Bata) இறப்பர்ச் செருப்பு அணிந்திருப்பானோ என்னவோ தேய்த்துத்தேய்த்து நடந்து கொண்டிருந்தான். பெற்றா தனியார் பேருந்து நிலையத்தில் எங்களைப் போலவே பலரும் வந்து சேர்ந்திருந்தார்கள். ஆட்களைத்தன் வயிற்றுக்குள் புதைத்துக்கொண்டு பேருந்து கிளம்புகையில் நேரம் காலை ஐந்து மணியைத் தொட்டுவிட்டிருந்தது. கலைந்திருந்த உறக்கம் கண்களைச்சுழற்றவே இருக்கையில் சாய்ந்து கொண்டேன்.

தூக்கம் கலைந்து கண்விழித்துப் பார்க்கையில் பேருந்து ஒரு மலைப்பாதையில் மிகவும் சிரமப்பட்டவாறே ஏறிக்கொண்டிருந்தது. நாக்கிளிப் புழுவைப்போல் அப்படியும் இப்படியுமாய் வளைந்த கொண்டிருந்த பாதை ஒருவாறாக சீர்பெற்று 20 நிமிடங்கள்வரை கழிகையில் நண்பர்கள் பரபரப்பாகினர். சில நிமிடங்கள் கழித்து வந்த இறக்கத்தில் எல்லோருடனும் சேர்ந்து நானும் இறங்கினேன். கடைகளின் பெயர்ப்பலகையை அவதானித்ததில் பேராதனையை அடைந்து விட்டிருந்தது தெரிந்தது. முதல்தடவை வேறொரு நண்பனுடன் பல்கலைக்கழகத்தில் எம்மைப்பதிவு செய்ய வந்தபோது இறங்கிய இடம் இதுவல்ல என்பது புரிந்தது. துவிச்சக்கர வண்டிகளில் வந்த சிலர் எங்களை வரிசையில் வரச் சொன்னதும் நெஞ்சுக்குள் பயம் அடைத்துக் கொண்டது.

“அறுப்பாங்கள், இப்பவே வந்திட்டாங்கள். இண்டைக்கு course முடிஞ்சு வீட்டபோன மாதிரித்தான்...”

முன்னுக்கு நின்ற நண்பனின் முணுமுணுப்புக்கேட்டது. வந்தவர்கள் எமது சிரேஷ்ட மாணவர்கள் என்பதும் இன்றைக்குப் பகிடிவதை எம்மைப்பிழியப் போகின்றது என்பதும் மனதுக்கு உறைத்ததும் உள்ளம் நடுங்கியது. வந்தவர்களோ சிலர். நாங்களோ பலர். எனவே எங்கள் எல்லோரையும் விசாரிக்கவே அவர்களுக்கு நேரம் போதவில்லை. postal course எனப்படும் ஆங்கில வகுப்புக்கு நேரமாகவே எங்களை அருகிலிருந்த உணவகத்தில் உணவருந்திவிட்டு வருமாறு பணித்தார்கள். பின் அனைவரையும் அணிவகுத்து வருமாறு சொல்லிவிட்டு அவர்கள் மறைந்து விட்டார்கள்.

கண்டி-கம்பளை வீதியின் வழியே அணிவகுத்துச் சென்ற நாங்கள் ஒரு பாலத்தைக் கடந்தவுடன் அங்கே நின்ற வேறுசிலர் வழிமறித்துப்பின், வகுப்பிற்கு நேரமாகவே அருகிலிருந்த ஒற்றையடிப்பாதை போன்று காணப்பட்ட ஒரு பாதையினால் எம்மை ஏற்றி அனுப்பினார்கள். புற்பற்றைகளாய் மண்டிக்கிடந்த அந்தப்பாதை வழியே சென்று கட்டடக் காட்டுக்குள் நுழைந்தோம். எங்களுக்கு அனுப்பப்பட்டிருந்த கடிதங்களில் குறிக்கப்பட்டிருந்த வகுப்பறைகளின் இலங்கங்களைத் தேடிக் கண்டடைகையில் வகுப்புகள் ஆரம்பித்து விட்டிருந்தன. முன்னைய வகுப்புகளிற்கு நான் சென்றிருக்கவில்லையாதலால் ஆங்கில ஆசிரியை எனது பெயரைப்பதிவு செய்துவிட்டு இருக்கையில் சென்று அமருமாறு பணித்தார்.

கண்களால் வகுப்பினைத் துளாவினேன் யாராவது தெரிந்தவர்கள் இருக்கிறார்களா என்கின்ற ஆவலில். ஊஹும். யாரும் தெரிந்தவர்களாய்த் தெரியவில்லையே.

அட! இவளை எங்கோ பார்த்திருக்கிறேன். நன்றாய்ப்பழகியுமிருக்கிறேன். எனது வரிசையில் எதிர்ப்புறமிருந்த பெண் மனதினைக் குடைந்தாள். நன்றாய் யோசித்தும் சட்டென அவள் யாரென நினைவிற்கு வரவில்லை. ஆனால் அவளுடன் எப்போதோ நன்றாய்ப்பழகியிருப்பதாய் மட்டும் மனது அடித்துச்சொன்னது.

யாராயிருப்பாள் இவள். என்னுடன் ஒன்றாய் ரியூசனுக்கு வந்திருப்பாளோ? எங்கே வந்திருப்பாள் Science Academy-க்கா இல்லை Shamrock-இற்கா? Shamrock-இல் Double maths மட்டும்தான். அங்கேயும் கமலசிங்கம் சேரின் கடிக்குப்பயந்து அவரிடம் படித்த பெண்களே இருவர்தான். அவர்களின் யாருடைய பெயருமே எனக்குத் தெரிந்ததில்லை. அவர்களுடன் கதைத்ததுமில்லை. Science Academy-யில் சோதிலிங்கம் சேரிடம் physics படிக்க வந்திருப்பாளோ? வந்திருந்தாலும் அவளுடன் பழகியிருக்கச்சந்தர்ப்பமில்லை. சனிஞாயிறுகளில் காலை 8.00 மணி physics வகுப்பிற்கு நான் வீட்டிலிருந்து 8.00 மணிக்கு வெளிக்கிட்டால் 8.10 இற்கு சைக்கிளைத்தள்ளிக்கொண்டு உள்ளே செல்ல சரியாக எனக்குப் பின்னால் சாளியைத் (ஒருவகை motorcycle) தள்ளிக் கொண்டு சோதிலிங்கம் சேர் வருவார். இருவருமே ஒன்றாகவே உள்ளே செல்வோம். வகுப்புகளில் பின்னாலிருந்தால் கண்தெரியாது என்பதால் பெரும்பாலும் மாணவர்கள் அமரத்தொடங்கும், முதல் அல்லது இரண்டாம் வாங்கில்களிலேயே (bench) அமர்ந்து விடுவதால் கூடப்படிக்கும் பெட்டைகளைப்பார்க்க முடிவதில்லை. பின்னாலையோ பக்கத்தாலையோ திரும்ப வெட்கம் மட்டுமல்ல, பின்னால் அமர்ந்திருக்கும் பெடியங்களின் கடிதாங்க முடியாததாயிருக்கும் என்பதுவும் ஒரு காரணம். இதே நிலைதான் மணியம் சேரின் chemistry பாடத்திலும். ஆக இவளை நான் ரியூசனில் பார்த்திருக்க முடியாது.

A/L படித்ததோ ஆண்கள் பாடசாலையில். அப்படியெனறால் O/L இல் ஒன்றாய்ப் படித்திருப்பாளோ? படிச்ச பள்ளிக்கூடங்களிலையெல்லாம் சொந்தக்காரர் வாத்திமாரா இருந்ததால எங்கட கலாச்சாரப்படி நானும் பெட்டைகள் இருக்கிற பக்கமே திரும்ப முடியாமல் போய்விட்டது. அப்படியானால் வேறு எங்குதான் இவளைப் பார்த்தேன். நன்றாய்ப் பழகியிருப்பதாய் உள்மனம் சொல்கிறதே. ஒருவேளை 95 இல் யாழ்ப்பாணத்திலிருந்து இடப்பெயர்ந்து வசித்த இடங்களில் அருகருகே இருந்திருப்போமோ. அம்மாவுக்கென்றால் நன்றாகத்தெரிந்திருக்கும். பார்ப்போம், இல்லாவிட்டால் இவளிடமே கேட்டால் போயிற்று. கம்பசில பெட்டைகளோட தாராளமாக் கதைக்கலாம் தானே.

யாழ்ப்பாணத்திலையெண்டால் A/L படிக்கும் வரையும் பெடியளும் பெட்டையளும் ஒராளோடையொராள் frirndly-யாக் கதைக்கேலாது. ஆனால் கம்பஸ்க்கு போனாப்பிறகு எண்டால். அவை தாராளமா கதைப்பினம். பெட்டைகிளின்ர வீட்ட பெடியள் போவாங்கள். பெடியளின்ர வீட்ட பெட்டைகள் போகுங்கள். அதைப்பற்றி ஒருத்தரும் கணக்கே எடுக்கிறேல்லை. ஆனால் A/L படிக்கேக்குள்ள ஒரு பெட்டையும் பெடியனும் கதைச்சால் சரி. உடனேயே வீட்டில விளக்கம் தொடங்கீரும். பிறகு அந்தப் பெட்டை போறவாற இடமெல்லாம் அந்தப் பெட்டையின்ர தம்பியோ அப்பாவோ காவலுக்கு வரத் தொடங்கீருவினம். ஏன்தான் அப்படிச் செய்யினமோ தெரியாது. சிலவேளை Teen-age-இல பிள்ளைகள் வயசுக்கோளாறால ஏதும் செய்துபோடுவினம் எண்ட பயம்தான் காரணம் என நினைக்கிறேன். அதாலதான் teen-age முடியும் வரைக்கும் பிளளைகளை கவனமாப்பாக்கிறவை, teen-ageம் முடிஞ்சு பிள்ளைகள் கம்பஸ் போகத்தொடங்கினாப்பிறகு அவை பழகிறதைப்பற்றி அக்கறைப்படுவதில்லை.

பக்கத்தில் திரும்பி அவளைப்பார்க்கிறேன். அட அவளும்தான் என்னைப் பார்க்கிறாள். அந்தக்கண்களில் தெரியும் பரிவும் காருண்யமும் அப்படியே புத்தரை மனக்கண்ணில் கொண்டுவந்து நிறுத்துகிறது. அவளது சிநேகமான இதழ்வலிக்காத அந்த ஒற்றைப்புன்னகை அடித்துச் சொல்கிறது, இவளுடன் நான் நன்கு பழகியிருக்கிறேன் என்பதை மட்டுமல்லாமல் அவளுக்கும் என்னை நினைவிருப்பதை. Class முடிந்தவுடனேயே அவளிடம் விசாரிக்கவேண்டும் என்று உள்மனம் சொல்வதைக் கேட்க எனக்கே வியப்பாயிருக்கிறது.

என்னாயிற்று எனக்கு? எந்தப் பெண்ணையுமே ஏறெடுத்தும் பாராமல் திரிந்த நான் அவளிடம் வலியச் சென்று பேசுவதா? எப்படி? இதற்கு முன் எனக்கு எந்தப் பெண்ணுடனும் வலியச் சென்று கதைத்துப்பழக்கமில்லையே. முடியாது. அவளாய் வந்து கதைத்தால் இதைப்பற்றிக் கேட்கலாம். இல்லையென்றாலும் இன்னும் நான்கு வருடங்கள் இங்குதானே இருக்கப்போகிறோம். அதற்குள் எப்படியும் அவளைப்பற்றி அறிந்து விடலாம் என்று எண்ணியவாறே இருக்க, கண்கள் மீண்டும் அனிச்சையாய் அவள் பக்கம் திரும்பின.

எனக்குள் வியப்பு மேலிட்டது. என்னாயிற்று இந்தப் பட்டினத்தாருக்கு? இன்னும் அவரைக்காணவில்லையே என்று ஆச்சரியமாயிருந்தது. வழமையாகவே அழகாகத்தெரியும் ஒரு பெண்ணை கண் மீண்டும் பார்க்கத் தூண்டினால் மனதிற்குள் கண்ணதாசன் வந்துநின்று 'இந்திரியம் தீர்ந்து போனால் சுந்தரியும் பேய்போல' என்பார். அதையும் தாண்டி அந்தப் பெண்ணின் அழகை கவர்ச்சியை ரசிக்க மனம் விழைந்தால், பின்பிடரியில் இரண்டு தட்டுத்தட்டி 'பெண்ணாகி வந்ததொரு மாயப்பிசாசாம் பிடித்தென்னைக் கண்ணால் வெருட்டி முலையால்மயக்கிக் கடிதடத்துப் புண்ணாங் குழியிடைத் தள்ளியென் போதப் பொருள்பறிக்க' என்பார் பட்டினத்தார். பின் அவரின் அறுவை ஆரம்பித்து விடும்.

சீயும் குருதிச் செழுநீர் வழும்பும் செறிந்தெழுந்து
பாயும் புடவை ஒன்றில்லாத போது பகல் இரவாய்
ஈயும் எறும்பும் புகுகின்ற யோனிக்கு இரவுபகல்
மாயும் மனிதரை மாயாமல் வைக்கமருந்தி்லையே.

என்றவாறே சலித்துக்கொண்டு அவர் தன் தலையில் அடிப்பது மனதுக்குள் தெரிகையில் அந்தப் பெண் மறைந்து போயிருப்பாள்.

ஆனால் இன்று இவர்கள் இருவருமே வரவில்லையே. ஒருவேளை இவளின் அழகை ரசிக்காமல் இவள் யாரென சிந்திப்பதால் இருக்குமோ? அவளை மீண்டும் பார்க்கிறேன். அதே கனிவான கண்கள். வைத்தகண் வாங்காமல் பார்க்கச் சொல்கின்றன. மற்றம்படிக்கு சாதாரணமாக பாடசாலையில் கூடப் படிக்கும் பெண்களில் ஒருத்தியாக பருமனுமாயில்லாமல் ஒடிசலுமாயில்லாமல் அளவாக அவள் இருந்தாள். உடலியல் ரீதியாக எவ்வித ஈர்ப்புமே அவளிடம் ஏற்படவில்லை. இவளை எங்கோ பார்த்திருக்கிறேன், பழகியிருக்கின்றேன் என்கின்ற சிந்தனை மட்டுமே சுற்றிச்சுற்றி வந்தது.

அவளும் என்னையே பார்த்துக்கொண்டிருப்பதுவாய் உள்ளுணர்வு குறுகுறுக்க மீண்டும் அவளைப்பார்க்கிறேன். என்னையே பார்த்துக்கொண்டிருந்தவள் நான் பார்ப்பதை அறிந்ததும் கீழே குனிந்து எனது கால்களைப்பார்க்குமாறு சைகையால் கூறினாள். கீழே குனிந்து பார்த்ததும் அதிர்ந்து விட்டேன். இருகால்களிலுமிருந்து குருதி சொட்டுச்சொட்டாய் வழிந்து கொண்டிருந்தது. அதைக்கவனித்த அருகிலுருந்த மாணவன் மலையட்டை கடித்துவிட்டதாகக் கூறி ஆசிரியையின் அனுமதியுடன் என்னை வெளியில் அழைத்து வந்தான்.

கழிப்பறையில் சென்று பார்த்தபோது நான்கு அட்டைகள் இரத்தம் உறிஞ்சிக் கொழுத்துப்போய் கால்களில் ஒட்டிக்கிடந்தன. ஏற்கனவே குருதியை அவை வயிறு நிறையக்குடித்திருந்ததால் அவற்றை இழுத்தெறிவது சுலபமாயிருந்தது. பின் கால்களைக்கழுவிவிட்டு வழியும் குருதியின் மேல் காகிதத்தை ஒட்டி விட்டு வகுப்பிற்குள் நுழைந்தோம்.

கட்டுக்கட்டாய் குறிப்புகளைத்தந்துவிட்டு, அடுத்த இரண்டாவது சனிக்கிழமை மீண்டும் சந்திக்கலாமெனக்கூறி ஆங்கில ஆசிரியை வகுப்பினை நிறைவு செய்ய, அவளாகவே என்னிடம் வந்தவள்,

“ஹோமத தங்?” (எப்படி இப்போ?) -என்றாள்.

எனக்கு எதுவுமே புரியாமல் அவளைப் பார்க்க,

“ஆர் யூ சிங்கள?" என்றவளிடம் “நோ" என்றேன்.

“ஓ! சொறி சொறி. ஐ தோட் யூ ஆர் சிங்கள. பை த பை, ஹவ் ஆர் யூ பீலிங் நவ்? ரேக் கெயார் எபவுட் லீச்சஸ்.”

என்றவாறே எனது பதிலுக்குக் காத்திருக்காமல் வெளியேறினாள்.

அப்படியானால் இவள் தமிழிச்சி அல்ல. நான்தான் வீணாகக் குழம்பிப்போயிருக்கிறேன். இதற்கு முன்னர் நான் இவளைப் பார்த்திருக்கவோ பழகியிருக்கவோ எந்தச் சந்தர்ப்பமும் இருக்கவில்லை. ஆயினும் இப்போதும் உள்மனம் சொல்லியது, இவளுடன் நான் நன்றாய்ப பழகியிருக்கிறேன் என்று. சிலவேளை இவளின் சாயலில் யாருடனும் என் சின்ன வயதுகளில் நான் பழகியிருந்திருக்கக்கூடும்.

வெளியேறிய மாணவர்களுடன் சேர்ந்து வெளியேற முயல அருகிலிருந்த மாணவன் தடுத்தான், இவன்தான் என்னைக்கழிப்பறைக்கு அழைத்துச் சென்று அட்டைகளை அகற்ற உதவியவன்.

“கொஞ்சம் பொறும் ஐசே! இப்ப போனால் வெளியில நிக்கிற சீனியேர்ஸ் ராக்கிங் பண்ணப் பிடிச்சுக் கொண்டு போயிருவாங்கள். அவங்கள் எல்லாம் போய் முடிஞ்சாப் பிறகு நாங்க போவம்”.

அரைமணி நேரத்தின் பின் வெளியே வந்த போது யாரையுமே காணக்கிடைக்கவில்லை. வரும் போது வந்த பாதையை ஒருவாறு கண்டுபிடித்து பற்றைக்குள்ளால் இரத்தம் உறிஞ்சும் அட்டைகள் பற்றிய மிகுந்த கவனத்துடன் இருவரும் இறங்கினோம். வீதியினை அண்மிக்கையில் தூரத்தில் ஒருவர் வருவது தெரிந்தது. அவர் ஒரு சிரேஷ்ட மாணவராக இருக்கலாமோ என்கின்ற அச்சம் எங்கள் இருவரிற்குள்ளும்.

கிளீன் சேவ்-உம், காலில் பாட்டா இறப்பர் செருப்பும், பெல்ற் இல்லாத ஜீன்சிற்குள் உள்விடப்பட்டிருந்த சேட்-உம் பார்ப்பவர்கள் யாருக்குமே நாங்கள் புதுமுகம் என்பதை உணர்த்தி விடும்.

“ஐசே! அவர் தமிழில கதைச்சால் நாங்கள் விளங்காத மாதிரி நிப்பம். சிங்களம் எண்டிட்டு விட்டிட்டுப் போயிருவேர்.”

என்றான் நண்பன். அவன் இப்போது நண்பனாகி விட்டிருந்தான். அருகில் நெருங்கி வந்தவர் எங்களைப் பார்த்ததும்,

“மல்லிலா ஒயா சிங்களத?” (தம்பிமார் நீங்க சிங்களமா?) - என்றார்.

ஓம் என்பதுபோலவும் இல்லை என்பது போலவுமாக தலையை மாறிமாறி ஆட்டினோம்.

“யூ நோ இங்கிலிஷ் றைற்? ஆர் யூ சிங்கள ஓ ரமில்?”

தயக்கத்துடன் “ரமில்” என்றோம்.

“பேய்ப்.... ஆருக்கடா சுத்துறீங்க? நடவுங்கடா பிறிட்ஜ் குவாட்டசுக்கு. இண்டைக்கு ரெண்டுபேரும் செத்தீங்கடா மவனுகளே.”




Saturday, August 8, 2009

சிங்கப்பூருக்குப் பிறந்தநாளு - 09 ஆவணி 2009


1965ம் ஆண்டு ஆவணித் திங்கள் 09ம் நாள் பூமித்தாய் தனது புதியதொரு புதல்வனைப் பிரசவித்த பெருமையில் பூரித்துப் போயிருந்தாள். ஆசியக் கண்டத்தில் மலேசியாவிற்கும் இந்தோனேசியாவிற்குமிடையில் பிரசவிக்கப்பட்ட புதிய நாடொன்று பூமிப்பந்தில் தவழத் தொடங்கியிருந்தது. 1963 புரட்டாதி (September) 16ம் திகதி, மலாய், சாபா, சரவாக் ஆகிய பிரதேசங்களுடன் சிங்கப்பூரினையும் இணைத்து மலேசியா என்கின்றவொரு புதிய நாடு உருவாக்கப்பட்டிருந்தது. ஆயினும் சிங்கப்பூரில் இடம்பெற்ற சில இனரீதியிலான முரண்பாடுகளால் ஏற்பட்ட கலவரங்களாலும், அதனால் உண்டான பதட்டங்களாலும், வேறுசில காரணங்களாலும் அப்போதைய மலேசியப் பிரதமர் தலைமையிலான மலேசியப் பாராளுமன்றத்தின் ஒருமித்த ஆதரவுடன் சிங்கப்பூர், மலேசியக் கூட்டமைப்பிலிருந்து 09-08-1965 இல் வெளியேறியது அல்லது வெளியேற்றப்பட்டது. அன்றைய தினத்தில் சிங்கப்பூர் குடியரசு (Republic of Singapore) சுதந்திர நாடாக திரு. லீ க்குவான் யூ (Lee Kuan Yew) அவர்களால் பிரகடனப்படுத்தப்பட்டது.


எந்தவொரு இயற்கை வளங்களும் இல்லாததுடன், 10% - 12% வரையிலான மக்களின் வேலையில்லாப் பிரச்சினையும் அப்போது சிங்கப்பூரின் எதிர்காலத்தைக் கேள்விக்குரியதாக்கியிருந்தன. இப்படியான காரணுங்களுக்கு அஞ்சியே ஆரம்பத்தில் 1963 இல் சிங்கப்பூர் மலேசியாவுடன் இணைந்து கொண்டது. இப்போது பிரிந்து வந்தாகிவிட்டது. பிரச்சினைகளும் அதிகரிக்க ஆரம்பித்து விட்டன. சுதந்திர சிங்கப்பூரின முதற் பிரதமரான திரு. லீ க்குவான் யூ, கலக்கமடையவில்லை. அவரது தீர்க்கதரிசனமிக்க பார்வைகளுடன் கூடிய திட்டங்களும், மனஉறுதியும் அயராத உழைப்பும், மக்களுக்கு நம்பிக்கையை ஊட்டியவாறே செயற்பட்ட பாணியும், விடாமுயற்சியும், அவருக்கு உறுதுணையாக அளப்பரிய பங்காற்றிய ஏனைய அதிகாரிகளின் பங்களிப்புகளும், மற்றைய நாடுகளை சிங்கப்பூரைப் பார்த்து வியக்க வைத்தன.


சிங்கப்பூரில் பல்லின, பல்மத, பல்கலாச்சார மக்கள் வாழ்ந்து வந்தாலும் அவர்களிடையே எந்தவிதமான இனமத முரண்பாடுகளும் இல்லாது ஒரேநாட்டு மக்கள் என்கின்ற சிந்தனையே முன்னிற்பது பெருமையளிக்கிறது. அனைத்து அரச நிறுவனங்களிலும் ஆங்கிலம், சீனம், மலாய் மற்றும் தமிழ் ஆகிய நான்கு அரசமொழிகளிலும் எவ்வித வேறுபாடுமின்றி மக்களுக்கான சேவைகள் வழங்கப்படுவதை எப்படிப் பாராட்டுவது?


1990 இல் திரு. லீ க்குவான் யூ, பிரதமர் பதவியிலிருந்து ஓய்வுபெற, திரு.கோ ச்சோ தொங் (Goh Chok Tong) அவர்கள் சிங்கப்பூர் குடியரசின் இரண்டாவது பிரதமர் ஆனார். 2003ஆம் ஆண்டளவில் பரவிய சார்ஸ் (SARS) நோயினால் சிங்கப்பூர் பாரிய பின்னடைவினை எதிர்கொண்டது. அதன் பொருளாதாரம் சரிந்தது. ஆயினும் தலைமைத்துவத்தின் சரியான திட்டமிடுகைகளினால் சரிவிலிருந்து மிக வேகமாகவே மீண்டுகொண்டது.


2004இல் திரு. கோ ச்சோ தொங் ஓய்வுபெற, சிங்கப்பூர் குடியரசின் மூன்றாவது பிரதமராக தற்போதைய பிரதமர் திரு. லீ சென் லூங் (Lee Hsien Loong,) அவர்கள் பதவியேற்றுக் கொண்டார். இப்போதைய சவாலாக, உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட பொருளாதரப் பின்னடைவும், H1N1 எனப்படும் பன்றிக் காய்ச்சல் நோயும் விளங்குகின்றன. ஆயினும் உல்லாசப் பயணிகளின் சொர்க்கபுரியாக விளங்கும் சிங்கப்பூரிற்கு வரும் பயணிகளின் வருகையை இவை பாரியளவில் பாதிக்காமலிருப்பதற்கு தற்போதைய அரசு மேற்கொண்டுவரும் தகுந்த நடவடிக்கைகளே காரணம்.


இன்றைய தினத்தில் தனது 44வது பிறந்த தினத்தைக் கொண்டாடும் சிங்கப்பூருக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Thursday, August 6, 2009

சின்னப் பையனின் நினைவு நாளும் பட்டாம்பூச்சிகளும்

1945 ஆவணி (August) 06ம் நாள் காலையும் வழமை போன்றே ஜப்பானின் ஹிரோஷிமா நகரமும் துயில் கலைந்து பரபரப்பாகிக் கொண்டிருந்தது. எத்தனையோ சுனாமிகளுக்குப் பழக்கப்பட்டிருந்த ஜப்பானியர்களால் வரப்போகும் சூறாவளியைப்பற்றி அறிந்திருக்க முடியவில்லை. எனோலா கே (Enola Gay) என்கின்ற B-29 ரக விமானத்தில் ஐக்கிய அமெரிக்காவிலிருந்து, அந்நாட்டின் விமானப்படை வீரரான போல் டிபெட்ஸ், ஹிரோஷிமா நகரினை அண்மித்துக் கொண்டிருக்கையில் நேரம் காலை 8.00 மணியினைத் தாண்டி விட்டிருந்தது. சரியாக காலை 8.15 இற்கு அந்த சூறாவளி விண்ணிலிருந்து தரைநோக்கி முதலாவது அணுகுண்டு மனிதகுலத்தை நாசமாக்க வெடித்துக் கிளம்பியது.

சின்னப்பையன் (Little Boy) தன் கடமையைச் சரிவரச் செய்து விட்டான் என்கின்ற சேதியோடு போல் டிபெட்ஸ் தன் தாயகத்திற்கு திரும்பினார். ஹிரோஷிமா எரிந்தழியத் தொடங்கியது. முதலாவது அணுகுண்டின் அனர்த்தத்தைக் கண்டு மனிதகுலம் உறைந்தது. ஒற்றைக் குண்டு, ஒரு இல்சத்து நாற்பதினாயிரம் அப்பாவி மக்களுடன் அந்த நகரையே சுடுகாடாக்கியிருந்தது. இந்றைக்குச் சரியாக 64 ஆண்டுகள் கழிந்த பின்னரும்கூட மீண்டும் பழைய நிலைக்கு திரும்பாத நினைவுச் சின்ன நகரமாய் ஹிரோஷிமாவும் நாகசாகியும்.

சின்னப்பையனிற்கு 3 நாட்கள் கழித்து, கொழுத்த மனிதன் (Fat Man) என அழைக்கப்பட்ட இரண்டாவது அணுகுண்டு நாகசாகி நகரினைத் துவம்சம் செய்திருந்தது. அத்துடன் நிபந்தனையற்ற சரணாகதியினை ஜப்பான் ஏற்றுக்கொள்ள இரண்டாம் உலகப்போர் உத்தியோகபூர்வமாக முடிவிற்கு வந்தது. ஆயினும், அணுகுண்டின் பிரயோகமின்றியே சில வாரகால இடைவெளிகளில், சோவியத் ரஷ்யப் படைகள் ஜப்பானுக்கெதிராக களத்தில் குதிக்கையில், ஜப்பான் சரணடைந்திருக்கும் என்பதும் அப்போதே அனைவருக்கும் தெரிந்திருந்தது. ஹிட்லரின் படைகளை விரட்டிச்சென்று வெற்றிவாகை சூடியிருந்த சோவியத் ரஷ்யாவின் செம்படைகள், நீண்டபோரினை அடுத்து சற்று இளைப்பாறிக்கொண்டிருந்த நேரம். அமெரிக்காவின் மூன்றெழுத்து நிறுவனம் மிகவேகமாக மூளையைக் கசக்கி, அடுத்த ஏகோபித்த வல்லரசாக தான் மட்டுமே விளங்கவேண்டும் என்கின்ற அதிகார வெறியுடனும், ஏனைய நாடுகளைத் தனது பலங்கொண்டு பணியவைக்கவேண்டும் என்கின்ற திமிருடனும் அந்த அராஜகத்தை நடாத்தி முடித்திருந்தது.

இன்றைய தேதியில் மட்டுமல்ல, அன்றுகூட, மனித உரிமைகள், மீறல்கள் என்று கூச்சலிடுவதெல்லாம் வெறும் 'பம்மாத்து'க்கு மட்டுமே. தனக்கு ஒரு நட்டமும் ஏற்படப்போவதில்லை என்று தெரிந்துவிட்டால் அமைதியாயிருப்பதும், அல்லது தனக்குபிடிக்காத மற்றைய நாடுகளுக்கு எதிரானவொரு துருப்புச் சீட்டாக அதனைப் பயன்படுத்த முடியுமெனின் வாய்கிழியக் கத்துவதும், இன்று எல்லா நாடுகளினதும் விதிகளில் ஒன்றாகிவிட்டதைப்பற்றிக் கதைப்பார் யாருமில்லை.

இன்று ஜப்பானும் ஐக்கிய அமெரிக்காவும் நெருங்கிய நண்பர்கள். சில சந்தர்ப்பங்களில் சில நாடுகளில் அமெரிக்காவால் நேரடியாக மூக்கை நுழைக்கமுடியாத சந்தர்ப்பங்களில், அதன் முகவராக ஜப்பான் செயற்படுவது ஒன்றும் பரமரகசியமல்ல.இன்றைய நினைவுநாளில், ஜப்பானிய தலைவர்களால், உலகில் உள்ள அத்தனை அணுவாயுதங்களும் அழிக்கப்படவேண்டுமென விடுக்கப்பட்டிருக்கும் அழைப்பு வரவேற்கப்பட வேண்டியது. அணுவாயுதங்கள் மட்டுமல்ல, கொத்தக்குண்டுகள், பொஸ்பரஸ் எரிகுண்டுகள் உட்பட அனைத்துரக அழிவாயுதங்களும் அழிக்கப்பட வேண்டியவையே.

எப்படி ஜப்பான் என்றவுடன் அணுகுண்டு நினைவிற்கு வருகிறதோ, அவ்வாறே ஜப்பான் என்றவுடன் நினைவிற்கு வரும் இன்னொரு விடயம் ஹைக்கூ.

மூன்று வரிகளில் அமைக்கப்படும் மிகச்சிறியவொரு கவிதை வடிவம். ஒரு கணநிகழ்வினை படம் பிடித்துக் காட்டி எம் கற்பனைச் சிறகினை விரித்துவிடும் அற்புதப்படிமம். இப்போதெல்லாம் தமிழில் கூட ஹைக்கூ கவிதைகள் பிரபலமாகி விட்டன. தமிழ்நாட்டுக் கவிஞர் ஒருவர் (பெயர் நினைவிற்கு வரவில்லை) ஹைக்கூ அந்தாதியே (நூறு ஹைக்கூ கவிதைகள்) எழுதிப் புதுமை செய்திருக்கிறார். அந்தாதி என்பது, ஒரு பாடலின் அந்தம் (முடிவு அல்லது இறுதி வார்த்தை), தொடர்ந்து வரும் மற்றைய பாடலின் ஆதியாக (ஆரம்பமாக அல்லது முதல் வார்த்தையாக) அமைய எழுதுவதாகும். எனக்குப் பிடித்த ஒரு மொழிமாற்றம் செய்யப்பட்ட ஜப்பானிய ஹைக்கூ;

உதிர்ந்த மலர்,
கிளைக்குத் திரும்புகிறது.
வண்ணத்துப்பூச்சி!


வண்ணத்துப்பூச்சி (Butterfly) என்றவுடன் இப்போதைக்கு சுபானு தான் நினைவிற்கு வருகிறார். மீண்டுமொரு தொடர் விளையாட்டிற்கு, இம்முறை அவரால் நான் அழைக்கப்பட்டிருக்கிறேன். நன்றி சுபானு.
நானும் மூவருக்கு இந்த வண்ணத்துப்பூச்சியை வழங்கவேண்டிய கட்டாயம். பெரும்பாலானவர்கள் ஏற்கனவே வண்ணத்துப்பூச்சியுடன் உறவு கொண்டாடி விட்டார்கள். இந்த மூவரின் தளங்களின் முகப்பிலும் வண்ணத்துப்பூச்சி பறக்காததால் என்னிடமிருந்து அவர்களிடம் பல்கிப்பெருகி (ஒன்றாய் வந்து மூன்றாய்ச் செல்கிறது) பறக்கிறது

1) பாலா இவரின் அத்தனை கவிதைகளையும் எனக்குப் படித்திருக்கிறது. அனாசயமாக வார்த்தைகளுக்குள் கருத்துக்களைப் புதைத்து விளையாடுகிறார்.

2) அறிவிலி என்கின்ற பெயரைச் சூட்டிக்கொண்டு இந்தியாவை ஒளிரவைத்துக் கொண்டிருப்பவர். இவரின் பயணக்கட்டுரைகள், இவர் போகுமிடமெங்கும் எம்மையும் கூடவே அழைத்துச் செல்கின்றன.(இவரிடமிருந்து எனக்கு வந்த சுவாரஸ்ய விருது, சுபானுவிற்குச் சென்றது. இப்போ சுபானுவிடமிருந்து வந்த வண்ணத்துப்பூச்சி விருது, இவருக்குச் செல்கிறது. உலகம் ரொம்பச் சின்னதா ஆயிட்டுதில்ல?)

3) கதியால் இவரது பெரும்பான்மையான இடுகைகள் கிரிக்கட் பற்றியே இருக்கிறது. எனக்கு அதில் ஆர்வம் இருப்பதில்லை. ஆனால் அவரின் சமீபத்தைய இடுகைகள், அதிலும் குறிப்பாக ஈழத்துச் சதன் பற்றிய பதிவினை அடுத்து இந்த வண்ணத்துப்பூச்சி அவரிடம் பறந்து செல்கிறது.

Wednesday, August 5, 2009

வேரென நீயிருந்தாய்...(4)

மேற்கு வானின் செக்கச்சிவப்பு மங்கிக்கொண்டிருக்க, கடலின் மேற்பரப்பு மினுங்கிக்கொண்டிருந்தது. இதமான காற்றிற்கு காதோரம் சிலிர்த்தது. மேகங்களற்ற வானில் வெள்ளிகள் பூக்கத் தொடங்கியிருந்தன. கப்பலின் மேற்தட்டில் இருந்தவர்களில் வயதானவர்கள் உட்தட்டுகளுக்குள் தஞ்சம் புகத்தொடங்கியிருந்தனர். கப்பலின் இருபுறமும் தொலைவினில் இரண்டு 'டோரா'க்கள் தங்களுக்கான பணிகளில் ஈடுபட்டிருந்தன.

அணியத்தை ஆக்கிரமித்திருந்தவர்கள் விலக நாங்கள் அணியத்தை அண்மித்தோம். பாரிய நங்கூரம் பக்கத்தில் படுத்திவைக்கப்பட்டிருந்தது. அணியத்திலிருந்து கீழே கடலினைப்பார்க்க அடிவயிற்றினுள் ஏதோ புரள்வது போல் இருந்தது. நீர்ப்பரப்பைக்கிழிக்கும் முனைப்புள்ளியில் பட்டு கடல் இரண்டாகப் பிரிவதுபோல் தோன்றியது. கடலில் எழும் அலைகளால் கப்பலின் ஆட்டம் அணியத்தில் அதிகமாய் இருந்தது.

“ஐசே! எனக்குத் தலையைச் சுத்துறது போல வருகுது. வாங்க உள்ளுக்க போவம்.”
கூட வந்திருந்த நண்பர்களில் ஒருவன் கூறினான்.

“கொஞ்சம் செல்லப் போவம் ஐசே! இப்ப உள்ளுக்குள் ஒரே சனமாயிருக்கும். கத்திக் கொண்டிருக்குங்கள். எல்லாரும் நித்திரையாப் போனாப்பிறகு நாங்க போய் நித்திரையைக் கொள்ளுவம்.”
-இது மற்ற நண்பன்.

எனக்கோ இன்றைய இரவு முழுதையும் வானத்தைப் பார்த்தவாறே இருக்க வேண்டும் போல் இருந்தது.

“நாங்கள் இண்டைக்கு இரவுமட்டும்தான் இப்பிடிக் கடலில இருக்கேலும். இதுக்குப் பிறகு எப்ப எங்களுக்குச் சான்ஸ் (chance) கிடைக்குமோ தெரியாது. அதால இண்டைக்கு இரவு இதிலையே படுப்பம் ஐசே!” 
-என்றேன்.

இரண்டாவது நண்பன் சம்மதிக்க முதல் நண்பன் உட்தளத்துக்குள் சென்றான். பின் நாங்களும் உள்ளே சென்று ஆளுக்கொரு பாயினை எடுத்துக் கொண்டு மேலே வந்தோம். பாய் வெறும் ஊத்தையாகக் கிடந்தது. அமெரிக்கன்மா (கோதுமை மா) வேறு அதில் அப்பிக் கிடந்தது.

“இந்தமுறை கப்பலில மா தான் வந்திருக்குப்போல.” 
என்றான் நண்பன்.

சரக்குக் கப்பலான 'லங்கா முதித' யாழிலிருந்து திருகோணமலைக்குத் திரும்புகையில் ஒருநாள் அவகாசத்தில் பயணிகள் கப்பலாக மாறியிருந்தது. பாயினை அருகில் வைத்து விட்டு அண்ணாந்து வானத்தினைப் பார்த்தேன். வடக்கு வானில் துருவ நட்சத்திரம் துலங்கிக் கொண்டிருந்தது. 'பெருங்கரடி' யின் ஏழு நட்சத்திரங்களும் மிகத் தெளிவாக தெரிந்தன. உச்சி வானத்தில் சிங்கத்தின் தலைக்கான வினாக்குறி வடிவமைக்கும் நட்சத்திரங்களுடன் அதன் வால்ப்பகுதிவரை நீண்ட, முக்கோண வடிவமைக்கும் நட்சத்திரங்களும், கிழக்குத் திசையிற்குக் கோடிழுக்கும் மூன்று நட்சத்திரங்களென திசையறிவதற்கு திசைகாட்டி, இரவினி்ல் அவசியமற்றது என்பதைத் தெளிவாக உணர்த்தின.

நண்பனிடம் நட்சத்திரங்களைக் காட்டி, “நாங்க ஏழாம் வகுப்பில படிச்சது உங்களுக்கு ஞாபகம் இருக்கா” என்று கேட்டது அவனுக்கு விசரைக் கிளப்பியிருக்குமென நினைக்கிறேன். எதுவும் பேசாமல் பாயை விரித்துப் படுத்துக் கொண்டான். நானும் பாயினை விரித்துப் படுத்துக் கொண்டேன். நித்திரை வர, முதல்தடவையாக அடம் பிடித்தது. தெற்கு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த கப்பலின் அணியத்தின் கைப்பிடிகளுக்கிடையால் தென்சிலுவை காட்சியளித்தது. ஆனி மாதத்தின் (June) நேரம் நடுநிசியை அண்டுவதை மேலே வரத்தொடங்கியிருந்த ஆங்கில 'J' வடிவிலமைந்த விருச்சிக இராசியினைக் குறிக்கும் நட்சத்திரங்களும், அதன் அருகே காணப்பட்ட தனுசு இராசிக்கான நட்சத்திரங்களும் உணர்த்தின.

காற்று சற்றே கடுமையாக வீசத் தொடங்கியிருந்தது. காற்று அள்ளிவந்த கடலலைகளிளின் துமிதங்கள் சில எங்கள் மீதும் விழத்தொடங்கியிருந்தன. அருகே திரும்பி நண்பனைப் பார்த்தேன். நன்றாக பாயினைச்சுருட்டிக் குறங்கிக்கிடந்தான். குளிர் அதிகமாகவே கைகள் அனிச்சையாகப்பாயினைப் போர்வையாக்கின. உறக்கம் வர மறுக்கவே விழிகள் மீண்டும் வானத்தை வெறித்தன. அது முன்னிரவுக் காலமாதலால் அப்போதுதான் கீழ்வானில் நிலவு காலிக்கத்தொடங்கியிருந்தது. நட்சத்திரங்கள் எல்லாம் என்னையே பார்த்துக்கண்சிமிட்டுவதாய் மனதுக்குப்பட்டது. 

எத்தனை ஆண்டுகள் ஓடிவிட்டன இப்படி வானத்தைப் பார்த்து சிநேகத்துடன் சிரித்து? நெஞ்சு சிலிர்த்தது. அக்காவும் இப்போது வானத்தைப் பார்ப்பாளா? இதோ, என்னைப் பார்த்துக் கண்சிமிட்டும் இந்த ஒற்றை நட்சத்திரத்தை அக்காவும் பார்ப்பாளா?

நட்சத்திரங்களுடனான அறிமுகத்தை எனக்கு ஏற்படுத்தித்தந்தவளே அவளல்லவா. நட்சத்திரங்களுக்கும் கிரகங்களுக்குமான வேறுபாட்டை, செந்நிறமான செவ்வாய்க்கிரகத்தை, துல்லியமான வியாழனை, புதன், சனி, சுக்கிரன் என்பவற்றுக்கிடையிலான வேறுபாடுகளையெல்லாம் கற்றுத்தந்தவள் அவள்.

அக்கா! எங்கேயிருக்கிறாய் நீ? எப்படியிருக்கிறாய்? எப்படிப்பட்ட சூழ்நிலையினையும் சமாளித்து கலகலப்பாக்கும் நீயில்லாமல், இப்போது நானுமில்லாமல் அம்மா மட்டும் நம் நினைவுகளுடன் எப்படித்தான் தனித்திருக்கப்போகிறாவோ? உன் ஆசையை நிறைவேற்றும் பயணத்தில் நான் பயணிக்கத்தொடங்கியிருப்பதை நீ அறிவாயா? உனது பயணம் நீண்டநெடிய பயணம் என்பதை நானறிவேன். உன்னைத்தொடர்பு கொள்ளமுடியா இடத்தில் நீ. 

ஏ நிலவே! காதலர்க்குத்தூது செல்லும் நீ எனக்காக என் சகோதரியிடம் சேதி சொல்லாயோ. “நிலவு வந்து பொழியும் நேரம் நீ வரவில்லை” என்றவாறல்லவா அவள் சென்றுவிட்டாள். எந்தக்காப்பரணுக்குள் அவள் விழி இமைக்காதிருக்கிறாளோ? அந்த மெல்லியலாளை, வீட்டிலுருக்கையில் வெளியே தனித்துச்செல்லவே அஞ்சியவள், இன்று காலமிட்ட கட்டளையில். அப்பாவைக் காணாமல் ஆக்கியவர்களை எம்மண்ணிலிருந்து காணாமலாக்கும் பணியில்.

ஓ! இன்றைக்கு ஆனி எட்டாந் தேதி. இதே தேதியில் ஏழுவருடங்களுக்கு முன்னர், 1990இல் ஊரில் எத்தனை சந்தோசமாகப்பொழுது கழிந்து கொண்டிருந்தது. கோட்டைப்பிரச்சனையை அடுத்து பாடசாலைகள் யாவற்றிற்கும் விடுமுறை விடப்பட்டிருந்ததால் எல்லோருமே வீட்டில் கூடிக் குதூகலித்துக் கொண்டிருந்தோம். யார் கண் வைத்தார்களோ? 1990 ஆவணி (August) 22உடன் எமது சந்தோசங்கள் அனைத்தும் குழிதோண்டிப் புதைக்கப்பட்டன. கோட்டையில் முற்றுகைக்குள்ளாக்கப்பட்டிருந்த படையினரை மீட்கவென அன்றைய தினத்தில் ஊர்காவற்றுறையில் சிங்களப்படையினர் தரையிறக்கப்பட்டிருந்தனர். அன்றைய காலையே பொம்மர் வந்து வங்களாவடிச்சந்தியில் குண்டுகளை வீசிவிட்டுச் சென்றிருந்தது. பின் உலங்குவானூர்திகள் சகட்டுமேனிக்கு 50 கலிபர்களாலும் ரொக்கட் குண்டுகளாலும் மக்கள் எல்லோரையும் பதுங்குகுழிகளுக்குள் முடங்கச் செய்திருந்தன. தொடர்ந்துவந்த நாளும் அவ்வாறே கழிய மறுநாள், அந்தநாள் 24 ஆவணி (August) 1990, எம்மூர் மக்களின் வாழ்வில் மறக்கமுடியாநாள். முச்சக்தி (திரிவிடபலய) நடவடிக்கை மூலம் சிறிலங்கா இராணுவம் எம்மூர்களைச்சிதைத்து அழித்தநாள். ஆமி வருகுது. ஓடுங்கோ என்று அயலவர்கள் சொல்ல என்னுடன் அக்காவையும் அம்மாவையும் “வங்களாவடியடிக்கு அங்கால புங்குடுதீவுப்பக்கமா போங்கோ. நான் முக்கியமான சாமான்களை எடுத்துக்கொண்டுவாறன்” என்று சொன்ன அப்பாவை, அதற்குப்பிறகு நாங்கள் யாருமே காணவில்லை. ஆமி மண்டைதீவுக்குச்சென்றபின்னர் அராலி வெளியிலும், அருகுக்காணிகளிலும் வைக்கோலால் மூடப்பட்டுக்கிடந்த இறந்த சடலங்களுக்குள்ளும் காயம்பட்டவர்களுக்குள்ளும் அப்பாவைக் காணக்கிடைக்கவில்லை. “மண்டைதீவில் வைத்து உங்கட அவரக் ஹெலியில ஏத்தினதைக் கண்டனான்.” என்று தெரிந்தவர் ஒருவர் சில நாட்களின் பின் அம்மாவிடம் கூறினார். அதன்பின்னர் எந்தத்தகவலும் யார்மூலமும் அறியக்கிடைக்கவில்லை. அப்பாவின் பொறியியல் கனவை என்னை நிறைவேற்றுமாறு சொல்லிவிட்டு அக்கா வீட்டைவிட்டுப் புறப்பட்டுவிட்டாள்.

இருண்டவானம் விடியத் தொடங்கியிருந்தது. வந்திருந்தவர்கள் எல்லோரும் காலைக்கடன்களை முடிப்பதற்கு முண்டியடிக்கத்தொடங்கின்ர். எல்லாப் பாதுகாப்புச் சோதனைகளும் முடிந்து திருமலைத் தரையிற் கால் பதிக்க நேரம் மதியத்தை எட்டியிருந்தது. திருமலை நகரத்தனை அடைந்து மதிய உணவை முடிக்கையில் நேரம் 3.00 மணியைக்கடந்திருந்தது. மூவருக்கும் எங்கு செல்வதென்று தெரியவில்லை.

நண்பன் றோசனின் வீட்டிற்கு அருகிலிருந்த பொதுத்தொலைபேசியினூடாக அழைப்பினை ஏற்படுத்தினேன். அவனின் தாயார் மூவரையும் வீட்டிற்கு வருமாறு கூறினார் முகவரியைப் பெற்றுக் கொண்டு, தயக்கத்துடனும் பயத்துடனும் ஓட்டோ ஒன்றினை வாடகைக்கு அமர்த்திக் கொண்டே Orrs Hill இற்கு போகுமாறு கூறினோம். சிறிது நேர பயணத்தின் பின், 

“இதில நீங்க எங்க போகவேணும்?” 
என்றார் ஓட்டோக்காரர். 

அருகிலிருந்த கடையின் பெயர்ப்பலகையில் உவர்மலை என்று இருக்கவே 

“நாங்க Orrs Hill இற்குப் போகவேணும்.” 
என்றேன். 

“இதுதான் Orrs Hill” 
என்றவர் நாங்கள் விழிப்பதைப் பார்த்து, 

“உவர்மலையைத் தான் Orrs Hill எண்டும் சொல்லுறது” 
என்றார். 

நாலாம் ஒழுங்கையில் 41ஆம் இலக்க வீட்டினில் ராயேஸ்வரி அம்மாவைக் கண்டவுடன்தான் நெஞ்சிற்குள் நிம்மதி வந்தது.

உபசரிப்பின் பின் மறுநாள் காலை ஆனி 10, 1997 அன்று, எங்கே புறப்படுவதென்ற தயக்கத்துடன் வவுனியாவில் உள்ள பெரியம்மாவின் மகனுக்கு அழைப்பினை ஏற்படுத்தினேன். அவரோ மிகுந்த பதட்டத்துடன்,

“இயக்கம் வவனியாவுக்குள்ள அடிச்சுக்கொண்டு வந்து கொண்டிருக்கிறாங்கள். தாண்டிக்குளம் எல்லாம் பிடிச்சிற்றாங்களாம். இஞ்ச சனமெல்லாம் ஓட ஆயத்தப் படுத்துதுகள்.” 
என்றார். 

அது வெற்றி நிச்சயம் (ஜெயசிக்குறு) நடவடிக்கைக்கு எதிராக செய் அல்லது செத்துமடி-1 நடவடிக்கையென மறுநாள் கொழும்பில் பத்திரிகை வாசிக்கையில் தெரியவந்தது.


Saturday, August 1, 2009

தொடர் வினா

நிலைத்தலுக்கும்
கொண்ட நிலையைக்
கலைத்தலுக்குமிடையில்
வாழக்கை வழுவுகிறது.

ஒற்றை வாக்கியம்கூட, ஒருவர்
நிலையைக் கலைத்துப்போடலாம்.
தாசிகூறிய மந்திர வார்த்தை
நகுலனை ராமதாசராக்கிற்றே!

நிலைத்தல் எப்போதுமே
நிலையற்றதாயிருப்பினும்
அந்த நிலைமாறலில்கூடவொரு
நிலைத்தன்மை இருக்கலாம்.

கலைத்தல்கூட, கைகூடிவரலாம்
அப்போதேயெம் மாயச் சுயம்
தொலைத்துத் தெளிவுகாணும்
வல்லமை கொளல் வேண்டும்.

நிலைப்பேனா? இல்லையின்னும்
அலைவேனா? கொண்ட சுயம்
கலைப்பேனா? மீண்டு, நான்
பிழைப்பேனா? தொடரும் வினா.