Friday, December 5, 2014

வேரென நீயிருந்தாய்...(56)

17 ஓகஸ்ற் 2003, ஞாயிற்றுக்கிழமை. நதீஷாவிற்கு குத்து ஆரம்பித்துவிட்டிருந்தது. பக்கத்துவீட்டு அன்ரியை உதவிக்கு அழைத்தேன். வந்து பார்த்தவர் ஆஸபத்திரிக்குக்கொண்டு செல்லும்படி கூறவே, முச்சக்கர வண்டியில் கிளிநொச்சி பொன்னம்பலம் ஞாபகார்த்த வைத்தியசாலையை அடைந்தோம். நதீஷாவை வோர்ட்டினுள் அனுமதித்துவிட்டு என்னை வெளியே நிற்கும்படி கூறினார்கள். வலியில் நதீஷா அழுவதைப்பார்க்க தாங்கமுடியாமல் இருந்தது. நேரமாக நேரமாக அவள் குரலில் தெறிக்கும் வேதனையின் அளவு அதிகரித்துச் செல்ல, எனக்குள் திகில் பரவத்தொடங்கியது .உள்ளே சென்ற ஒரு தாதி அவளை ஏசத்தொடங்கினாள்

'இப்ப என்னத்துக்கு இந்தக்கத்து கத்துற? வாயாலயே பெறப் போறாய்?'

நதீஷா ஏதோ முனகுவது கேட்க, அந்தத் தாதியின் மேல் ஆத்திரமாய் வந்தது. வந்த ஆத்திரத்தில் உள்ளே சென்று, 

'கதைக்கிறத கொஞ்சம் யோசிச்சுக்கதைக்க வேணும். சரியா?'  என்றவாறே அந்தத்தாதியை முறைத்தேன்.

'ஆரு உம்மை இதுக்குள்ள விட்டது? வெளியேபோம் முதல்ல. வந்திற்றார் பெரிசா ஆட்டிக்கொண்டு விண்ணாணம் கதைக்க,.'

'வாயிருக்கு எண்டிறதுக்காக கண்டுபாட்டுக்கு கதைச்சால் நடக்கிறதே வேற' எனக் கத்த

'இப்பிடிச் சொல்லுறநீர் இதையெல்லாம் பத்துமாசத்துக்கு முதலே யோசிச்சிருக்கோணும். இப்ப சும்மா இதில நிண்டு கத்தி வேலைசெய்யிறாக்களுக்கு இடைஞ்சல் செய்யாம வெளிய போம் முதல்ல'

'ப்ளீஸ்ஸப்பா...'

குரல்கேட்டு நதீஷாவைப் பார்க்க, அவள் விழிகள் பிரச்சனை பண்ணாமல் போகுமாறு இறைஞ்சின. விட்டால் நிலைமை இன்னும் ரசபாசமாகிவிடலாம் என்று அவள் பயப்படுவது புரிந்து மௌனமாய் வெளியேறினேன். 

எல்லாமே என்னால்தான் வந்தது. கருத்தரித்திருக்கலாமென்று கருதுகின்ற அன்றைய கூடலின் முடிவில் சுவாசம் வலமிடமின்றி சமச்சீராயிருந்ததை அவதானித்ததால் உண்டான பயம், குழந்தைபற்றிய எந்தவொரு தகவல்களையும் அது பிறக்கும்வரை எங்களுக்கு தெரிவிக்கக்கூடாதென மருத்துவர்களிடம் முதலிலேயே நான் சொல்லிவிட்டிருந்தேன். அதனாலேயே நதீஷா கண்டியில் இருக்க விரும்பியிருந்தாலும், வேறு காரணங்களைச்சொல்லி பிள்ளைப்பேற்றை கிளிநொச்சியில் அமையுமாறு பார்த்துக்கொண்டேன். இப்போது அவள் அனுபவிக்கும் வேதனைகளைப் பார்க்கையில் என்மேலேயே எனக்கு கோபம்கோபமா வந்தது. இவ்வாறனவொரு தவறு மீண்டும் நிகழ்ந்துவிடக்கூடாதென்ற எண்ணம் உண்டானது. அது பெண்களின் பிரசவநேரத்து சபதம் போல் அமையக்கூடாதென்பதற்காக உடனடியாகவே வெளிநோயாளர் பிரிவிலிருந்த வைத்தியரை அணுகி எனக்கு வாசெக்டமி செய்யும்படி வேண்டினேன். சிரித்தவர்,

'இதுக்கெல்லாம் எத்தனையோ ரெம்பறறி மெதேட்ஸ்; இருக்கு. நீங்க ஏன் பேர்மனெற் மெதேட்டுக்கு இப்ப போறீங்க? இதெல்லாம் நாலைஞ்சு பிள்ளைப்பெத்தவைக்குத்தான் செய்யிறது. அந்த நேர்ஸ் சும்மா அப்பிடித்தான் சத்தம் போடுவா. இல்லாட்டி எல்லாரும் கத்திக் கொண்டிருப்பினமெண்டு. மற்றம்படிக்கு அது அருமையான மனிசி. பேஷன்ற்சை அந்தமாதிரிப் பாத்துக்கொள்ளும்'

அதற்குள் நதீஷாவின் வீரிட்ட ஓலம் கேட்டது. உடனேயே வைத்தியரிடமிருந்து விடைபெற்று நெஞ்சு படபடக்க பிரசவவிடுதியனைநோக்கி விரைய, மறுபடியும் நதீஷாவின் வீரிட்ட ஓலம். உடல் நடுங்கத் தொடங்கியது. எப்படித்தான் பிரவசவிடுதியனை அடைந்தேனோ தெரியாது. உள்ளே கதவு சாத்தப்பட்டிருக்க, வெளியிலிருந்த வாங்கில் அமர்ந்து கொண்டேன். நெஞ்சுக்குள் பல்வேறு எண்ணங்களும் ஓடலாயிற்று. ஒவ்வொரு பிள்ளைப்பேறும் பெண்ணிற்கு மறுபிறப்பென்பார்கள். இப்போது நதிஷாவின் எந்தவொரு சத்தத்தையும் கேட்கமுடியவில்லை. அவளுக்கு ஏதேனும் ஆகியிருக்ககுமோ? உலகத்திலுள்ள அத்தனை கடவுளர்களையும் பிரார்த்திக்கத் தொடங்கினேன்.

'ஜெயந்தன் எண்டிறது ஆரு?'

குரல்கேட்டு திடுக்கிட்டேன். முன்னர் ஏசிய தாதி வெளியே வந்து நின்றாள். எழுந்தேன்.

'ஓ! நீரா? போம் போய் உள்ளுக்க பாரும்'

ஆச்சரியமாயிருந்தது. சிலமணிநேரங்களின் முன்தான் அப்படிச் சண்டை போட்டடோம். அதனால் அவளுக்கு கட்டாயம் நதீஷாவையும் என்னையும் தெரிந்திருக்கும். பின் எப்படி அதை மறந்திருப்பாள்? எனக்கிருந்த அவசரத்தில் மேற்கொண்டு சிந்திக்க நேரமின்றி உள்ளே விரைந்தேன். கட்டிலில் நதீஷா பலவீனமாய் சோர்ந்துபோய் கண்கள் சொருகிப் படத்திருந்தாள். அருகில் சென்று அவள் தலையைக் கோதினேன். மெல்லக் கண்விழித்தவள், என்கைகளைத் தன் கரங்களுக்குள் அடக்கிக்கொண்டாள்

'உங்கடை பிள்ளையைப் பார்த்திற்றீங்களா?' - என்றாள்

அப்போதுதான் அவள் அருகில் குழந்தையைக்காணவில்லை என்பதை உணர்ந்தேன். 

'எங்க எங்கட பிள்ளை?'

'கழுவக்கொண்டு போயிருக்கினம். இப்ப கொண்டுவந்திருவினம்' - என்றாள் உள்ளே வந்த அந்தத்தாதி.

'எங்க கற்கண்டு ரொபியொண்டும் எங்களுக்கில்லையா? நல்ல அப்பாதான்' என்றாள் தொடர்ந்து.

'கற்கண்டா? ரொபியா?' பதைபதைப்புடன் கேட்டேன்.

'வரும்தானே. பாரும்' என்றவாறே அவள் தன் வேலையில் முழ்கினாள்,

வேறிரு தாதியர்கள் கைகளில் குழந்தைகளுடன் எங்களை நெருங்கினர்.

'கொண்கிராயுலேஷன்ஸ் உங்களுக்கு ரெட்டைப்பிள்ளைகள் பிறந்திருக்கினம். கற்கண்டும் ரொபியும் காணாது. எங்களுக்கு நீங்க ஸ்பெஷல் ட்ரீட் தரவேணும்'

நெஞ்சுக்குள் ஏதோ வெடிக்க, தங்யூ, தங்யூ சோமச்சடி என் பொண்டாட்டி! . ஐ லவ்யூடி குட்டீம்மா!!!  

என்னையறியாமலேயே கண்களிலிருந்தும் தாரைதாரையாய் கண்ணீரருவிகள் பெருக்கெடுக்கத்தொடங்கின.








பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6 பாகம்-7 பாகம்-8 பாகம்-9 பாகம்-10 பாகம்-11 பாகம்-12 பாகம்-13 பாகம்-14 பாகம்-15 பாகம்-16 பாகம்-17 பாகம்-18 பாகம்-19 பாகம்-20 பாகம்-21 பாகம்-22 பாகம்-23 பாகம்-24 பாகம்-25 பாகம்-26 பாகம்-27 பாகம்-28 பாகம்-29 பாகம்-30 பாகம்-31 பாகம்-32 பாகம்-33 பாகம்-34 பாகம்-35 பாகம்-36 பாகம்-37 பாகம்-38 பாகம்-39 பாகம்-40 பாகம்-41 பாகம்-42 பாகம்-43 பாகம்-44 பாகம்-45 பாகம்-46 பாகம்-47 பாகம்-48 பாகம்-49 பாகம்-50 பாகம்-51 பாகம்-52 பாகம்-53 பாகம்-54 பாகம்-55

Tuesday, September 30, 2014

ஒரு துரோகியின் கதை

நான் உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லப் போகின்றேன். அது என்னைப் பற்றிய ரகசியம்தான் இதைப்பற்றி நீங்கள் மற்றவர்களிடம் மூச்சுக்கூட விடக்கூடாது. சரியா? 

'நீங்க ஏன் எப்பையுமே ஒருமாதிரி யோசிச்சுக் கொண்டே இருக்கிறீங்க? உங்களுக்கு அப்பிடி என்னதான் பிரச்சினை?' என்று நான் கேட்டதற்கு, இப்படித்தான் அவர் என்னிடம் தனது கதையைச் சொல்லத்தொடங்கினார்.

அது 1983ஆம் ஆண்டு. அப்பாவின் புடவை வியாபாரம் நன்றாகச் செழித்து இலாபம் கொழித்துக் கொண்டிருந்த காலப்பகுதி. நான் வைத்தியராகும் கனவுடன் ஏ.எல் பரீட்சைக்கு தீவிரமாகப் படித்துக் கொண்டிருந்தேன். காலம் செய்த கோலமோ காடையர் செய்த கேவலமோ அப்பாவும் புடைவைக்கடைக்குள்ளேயே சிறிலாங்கா அரசின் காடையர்களால் தீயிட்டுக் கொல்லபட்டார். நடப்பதை அறியமுடியாத நிலையில் நாங்களும் ஏனைய தமிழர்களுடன் அகதிகளாகப் பாடசாலைகளில் அடைக்கலம் புகுந்து பின் லங்காராணியில் காங்கேசன்துறைமுகத்தை வந்தடைந்தோம். இப்போது குடும்பப் பொறுப்பு என் தலையில் விழுந்தது. எனக்குப் பின்னே இரு தங்கைகள். வேலை தருவார் யாருமில்லை. யாழ்நகருக்குச் சென்று கடைகடையாய் ஏறி இறங்குகையில் தான் நல்லதம்பியாரைச் சந்தித்தேன். அவருக்கு அப்பாவைத் தெரிந்திருந்ததால் தனது புடைவைக் கடையில் நின்று வேலை பழகுமாறும் பிடித்திருந்தால் தொடர்ந்து வேலை செய்யுமாறும் கூறினார். கடவுள் இல்லையென்று யார் சொன்னது. அப்போது அவர் எனக்குக் கடவுளாகவே தெரிந்தார்.

கடையில் உண்மையாகவும் அர்ப்பணிப்புடனும் வேலைசெய்யத் தொடங்கி அவரின் நம்பிக்கைக்கும் உரியவனாகியிருக்கையில் ஒப்பறேஷன் லிபறேஷன் தோல்வியை அடுத்து இலங்கை இந்திய ஒப்பந்தம் உருவாகி, பின் திலீபனின் தியாகச்சாவுடன் இந்தியப்படைகள் வடக்கு கிழக்கெங்கும் ஆக்கிரமிப்புப் படையாய் மாறியது. இப்போது எங்கள் கடைக்கு இந்திய புடைவை வியாபாரிகள் நேரடியாகவே குறைந்த விலைகளில் புடைவைகளைக் கொண்டுவந்து தரத் தொடங்கினார்கள். நல்லதம்பி ஐயாவும் பேரம் பேசி வாங்கும் பொறுப்பை என்னிடமே ஒப்படைத்தார். எங்கள் கடையில் வியாபாரம் செழிக்கத் தொடங்கியது.

'நீங்க ஏன் தனியா பிஸினஸ் செய்யக் கூடாது?' இப்படித்தான் எங்களுக்கு வழமையாக புடைவைகள் கொண்டுவந்து தரும் அந்த வியாபாரி நல்லதம்பியார் இல்லாத ஒரு பொழுதில் என்னிடம் கேட்டான். அவன் கடந்த சில மாதங்களாகவே இந்தியாவிலிருந்து வரும் போது பல அன்பளிப்புப் பொருட்களை எனக்காகக் கொண்டுவந்து தருவதும் பதிலுக்கு நான் உள்ளூர் பொருட்களைக் கொடுப்பதுமாக எங்களுக்குள் வியாபாரத்தைத் தாண்டியும் உறவு பலப்படுத்தப்பட்டிருந்தது

'அவர் எனக்குக் கடவுள் மாதிரி. அவரால தான் எங்கட குடும்பம் இப்ப நல்லா இருக்கு அவருக்கு நான் துரோகம் செய்ய மாட்டன்'

'நீங்க என்ன பேசுறீங்க? இது துரோகமா? நீங்களும் முன்னேற வேணும் தானே'

'பரவாயில்லை. இவர் என்னை நல்லவே கவனிச்சுக் கொள்ளுறேர். அவர் இருக்கிற வரைக்கும் அவரை விட்டிட்டு நான் தனியாத் தொழில் தொடங்க மாட்டன்'

'உங்களைப் போல ஒரு தொழிலாளி கிடைச்சிருக்கிறதுக்கு அவர் கொடுத்து வைச்சிருக்கோணும்'

அந்தக் கொடுப்பினை நல்லதம்பியாருக்கு நீடிக்கவில்லை. சிலநாட்களின் பின் மாலையில் வீட்டுக்குச் செல்லும் வழியில் பலாலி வீதியல் விரைந்து வந்த இராணுவ வண்டியுடன் அவரது உந்துருளி மோதி அந்த இடத்திலேயே மரணத்தைத் தழுவிக் கொண்டார்.

அவரது பிள்ளைகளுக்குள் ஏற்பட்ட சொத்துப் பிரச்சனையால் கடையை விற்பதென்று முடிவாகியது. வழமை போன்று கடைக்கு புடைவை கொண்டு வந்தவனிடம் இனிக் கொண்டுவரத்தேவையில்லையென்று விசயத்தைச் சொன்னதும் அவன் கலங்கி விட்டான். 

'நீங்க என்னுடைய லோயல் கஸ்டமர். என்ரை மெயின் பிஸினஸே உங்களில தான் தங்கியிருக்கு. நீங்களும் இப்பை என்னைக் கைவிட்டிட்டா என்ரை பிஸினசும் போயிரும். நீங்க ஏன் தனிய இப்ப கடையை ஆரம்பிக்கக் கூடாது?'

'அதுக்கு என்னட்டைக் காசில்லையே'

தாடையைச் சொறிந்தவன், வின் வின் பிஸினஸ் மாதிரி நாங்க ரெண்டு பேரும் சேர்ந்தே இந்த பிசினசைச் செய்வம். என்ரை பேரில லீகலா எதுவும் செய்யேலாது. அதால உங்கடை பேரிலயே நீங்க கடையை வேண்டி பிஸினஸையும் றெஜிஸ்ரர் பண்ணுங்க. எனக்கு லாபத்தில பங்கு தாங்க. இதுக்கு நீங்க சரியெண்டா, இப்பையே நடக்க வேண்டிய அலுவல்களைப் பாருங்க.'

எதிர்பார்த்ததிலும் விட இலகுவாக கடையும் வியாபாரமும் எனது கைக்கு மாறியது. கடையிற்கான புதிய டிசைனிலான பெயர்ப் பலகையையும் அவனே குறைந்த செலவில் இந்தியாவிலிருந்து வருவித்திருந்தான். யாழ்நகரின் மையப் பகுதியில் யாழ் பேரூந்து நிலையத்தை நோக்கியபடியே மின்சாரநிலைய வீதியில் எங்கள் கடை ஜொலித்து வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுத்துக்கொண்டிருந்தது. 

அவன் யாழ்ப்பாணம் வரும் நாட்களிலெல்லாம் கடையிலேயே இரவிலும் தங்கி விடுவதால் எனக்கும் கொஞ்சம் ஓய்வு கிடைத்தது. 

இப்போது காலம் மாறியது. இந்திய இராணுவம் வெளியேறும் நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. இனி அவனால் வந்து போக முடியுமோ தெரியாது என்பதால் அவனது பங்கினை அவனிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதால் கடையை விற்கத் தீர்மானித்து அவனிடம் அது பற்றிச் சொன்னேன்.

'கடையை வித்துறாதீங்க சார், உங்ககிட்ட எவ்வளவு துட்டு இருக்கோ அதை மட்டும் கொடுத்திடுங்க. நீங்களும் நானும் அப்படியா பழகியிருக்கோம். நான் வரமுடியலின்னாலும் பரவால்ல. இந்தக்கடையை மட்டும் மூடிறாதீங்க. அந்த போர்டு, அது என் ஞாபகமாக எப்பவுமே இருக்கட்டும். அதைக் கழட்டிடாதீங்க சார். சரியா?' 

நட்பு சாதிமதம் மட்டுமல்ல அதுநாடு இனம் கடந்தெல்லாம் வியாபித்து வளரக்கூடியதென்பது புரிந்தது. பாரதி பாடியபடி எங்கிருந்தோ வந்தான். ஈங்கிவனை நான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன். பொதுவாக மலையாளிகளைத் தமிழ் துவேஷிகள் என்பார்கள். ஆனால் இவன் ஒரு மலையாளியாய் இருந்து கொண்டு ஒரு தமிழனான என்னை உய்வித்து விட்டிருக்கிறான்

இப்போது காலம் மாறியிருந்தது. யாழ் பேரூந்து நிலையமும் புகையிரத நிலையத்திற்கு அண்மையில் மாற்றப்பட்டுவிட்டிருந்தது. ஆனாலும் மாறாமல் அந்த வில்லுத்தகடு மட்டும் இந்த மின்சார நிலைய வீதியைத் தன் இரவிருப்பிடமாக மாற்றமல் வைத்திருந்தது. காலையில் தமிழீழ வானொலியில் போடப்படும் தத்துவப் பாடல்களுக்கு அபிநயம் பிடத்தபடியும் தன்பாட்டிற்குப் புலம்பிய படியும் யாழ் நகரை வலம் வந்து கொண்டிருந்தது.


ஒருநாள் மதியநேரம் அப்பாவிற்குத் திதி கொடுப்பதற்கு முனியப்பர் கோவிலுக்குச் செல்வதற்காக மூத்திர ஒழுங்கைக்குள்ளால் மிதிவண்டியினை விட்டேன். வீரசிங்கம் மண்டபம் தாண்டி முற்றவெளியை அண்மிக்கையில், அசோகா ஹோட்டலுக்குப் பின்னாலிருந்த புல்லுக்குளத்துப் பற்றைக்குள் வில்லுத்தகடு மறைந்து நிற்பது தெரிந்தது. சத்தமிட்டேன் திடுக்கிட்டுத் திரும்பியது இழித்துக் கொண்டே சாரத்தைத் தூக்கி கையால் பிடித்து ஆட்டிக் காட்டியது.

த்தூ.... முகத்தைத் திருப்பிக் கொண்டேன். அதன் பின் அதனைக் காணும் தருணங்களிலெல்லாம்  முகத்தைத் திருப்பிக் கொள்வேன். அது கடையின் முன்னே வந்து நின்று ஏதோதோ கத்தும் பின் கடை முகப்பைப் பார்த்து ஏதேதோ பிசத்தும். 

சில மாதங்களின் பின் மாத்தையா பற்றிய கதைகள் வதந்திகளாகப் பரவத் தொடங்கின. மணிக்கூட்டுக் கோபுரவீதியல் அமைந்திருந்த தையல் கடையொன்றிலிருந்து சில றோ உளவாளிகள் பிடிபட்டதாய்க் கதைத்துக் கொண்டார்கள். அப்படியானவொரு நாளில்தான் வியாபாரம் முடித்து கடை பூட்டிக்கொண்டிருந்த தருணத்தில் அவர்கள் வந்து என்னைக் கைது செய்து பங்கருக்குள் அடைத்தார்கள். பின்வந்த நாட்களில் பற்பொடி தருகையிலேயே பொழுதுகள் விடிவதை உணரக்கூடியதாகவிருந்தது. சிலமாதங்களின் பின், 

'நீங்க எங்கட மண்ணுக்குச் சொய்த துரோகத்தை மன்னிச்சு விடுறம். இனியாவது ஒழுங்கா இருங்கோ' 

- எண்டு சொல்லி சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்குக் கிட்டவா இறக்கி விட்டாங்கள். பிறகுதான் தெரிஞ்சுது யாழ்ப்பாணத்தை விட்டு எல்லாரும் இடம் பெயர்ந்திற்றினம் எண்டும் இப்ப யாழ்ப்பாணம் முழுக்க ஆமிதான் நிக்கெண்டும்.

தம்பி நீங்களே சொல்லுங்கோ நான் அப்பிடி என்ன துரோகம் செய்தனான்?

ஏனோ தெரியவில்லை. யாழ் இடப்பெயர்விற்கு சில மாதங்களின் முன்பு யாழ்நகரின் மத்தியல் அமைந்திருந்த புடைவைக்கடையொன்றின் பெயர்ப்பலகையொன்றிற்குள் பற்றரியில் இயங்கும் அதிசக்திவாய்ந்த வீடியோகமராவும் சில தொலைத் தொடர்பு சாதனங்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக கதையொன்று அடிபட்டது என் நினைவினில் வந்துபோனது.

* * *

பின்குறிப்பு: 96.ல் ஊருக்குத் திரும்பியவர்களில் சிலர் இந்த வில்லுத்தகடு, இராணுவ வாகனத்தில் மிடுக்கான சீருடையுடன் திரிந்ததை கண்டதாய்ச் சொன்னார்கள்.

படம் - இணையத்தில் பெறப்பட்டது

Friday, July 25, 2014

ஆனந்தி

வேலைத்தளத்தில் இருக்கையில் சொரூபன் கைபேசியில் அழைத்தான்.

'மச்சான் டேய் முகுந்தன் பிரான்சில இருந்து வந்து நிக்கிறானாமெடாப்பா. நாளைக்கு பின்னேரம் அவன மீற் பண்ணப் போவமா?'

முகுந்தனை மீண்டும் சந்திப்பேனென நான் கனவில்கூட நினைத்திருக்கவில்லை. இப்போது எல்லாமே அவனுக்குத் தெரிந்திருக்குமோ இல்லையோ என்றுகூடத் தெரியாது. எந்த முகத்துடன் அவனைச் சென்று சந்திப்பது? உண்மைகள் தெரிந்திருந்தால் என்னைக் காண்கையில் அவனது எதிர்வினைகளை என்னால் எதிர்கொள்ளக் கூடியதாக இருக்குமா? மனதிற்குள் ஆயிரம் கேள்விகளுடன் துரோகம் புரிந்துவிட்டதான குற்ற உணர்ச்சியும் மீண்டும் வந்து குறுகுறுக்கத் தொடங்கியது.

'இல்ல மச்சான். எனக்கு நாளைக்கு வேலை'

'என்னடா சனிக்கிழமையிலும் வேலையா?'

'OT' -யடாப்பா. 

'வேலைவேலையெண்டு இப்பிடி உழைச்சு என்னத்தை மச்சான் காணப்போறாய்'

'உனக்கென்னடாப்பா, நீ சொல்லுவ. அவனவனின்ரை கஷ்ரம் அவனவனுக்குத்  தான் தெரியும். மூண்டு வருஷமாச்சு. இன்னும் வந்து சேர்ந்த காசே ஏஜென்சிக்காரனுக்கு; கட்டி முடிக்கேல்ல. உழைக்கிற காசெல்லாம் வட்டிகட்டத்தான் சரியாயிருக்கு'ஃ

'சரியடாப்பா அப்ப கொன்பிரன்சில விடுறன். மற்ற லைனில முகுந்தன் நிக்கிறான் கதை'

நெஞ்சுக்குள் உண்டான நடுக்கத்தை மறைத்துக் கொண்டு,

'முகுந்தன் டேய் எப்பிடியிருக்கிற?'

'இருக்கிறன்ராப்பா. நீ எப்பிடி இருக்கிற. எப்பிடிப் போகுது கனடா எல்லாம்?'

'ம்ம்ம்.... இக்கரைக்கு அக்கரை பச்சைதான். என்ன விசயம். திடீரெண்டு கனடாக்கு வந்திருக்கிறாய்?'

'இல்ல மச்சான் தெரியாதே. வயசும் போகுது. அக்காதான் வரச் சொன்னவா. இஞ்சையொரு பிள்ளையைப் பாத்து வைச்சிருக்கெண்டு. போட்டோ பிடிச்சிருந்துது. அதுதான் நேரபாத்துக் கதைச்சுப்பழகி பிடிச்சிருந்தா கட்டுவமெண்டிட்டு வந்தனான்.'

'அப்ப ஆனந்.'

தீ-யை வாய்க்குள் விழுங்கிக் கொண்டேன். என்னையே அறியாமல் வந்து விழுந்துவிட்ட வார்த்தைகள். முகுந்தன் என்றவுடன் ஆனந்தியும் சேர்ந்தே நினைவுக்கு வருவாள். ஆனால் இந்த இருவருக்கும் நான் செய்திருப்பது? 

வாற செவ்வாய் வேலைக்கு லீவு போட்டு திரும்பவும் டொக்ரர் சூரியபாலனைப் போய்ப் பார்க்க வேணும். இல்லையெண்டா திரும்பவும் டிப்பிரஷன் வந்து வேலைக்கும் போகேலாம. ச்சே இவனை ஆரு இப்ப இஞ்சை வரச் சொன்னது?

'அந்த வே... பற்றி என்னோட கதைக்காத மச்சான். அவள் இப்பை அங்க அடிசர... .தெரியுமா உனக்கு?

கைகள் நடுங்கி கைபேசி கீழே விழுந்தது.  மனம் உடைந்து நொருங்கி சுக்கல்சுக்கலானதாய்.. குற்றவுணர்ச்சியில் மனம் குமையத் தொடங்கியது.

ஆனந்தி. 

எங்களின் சின்ன வயதுச் சிநேகிதி. பாலகப் பருவத்திலிருந்தே ஒன்றாவே படித்து வந்தோம் ஆண்பெண் பேதமறியா பேதை பெதும்பைப் பருவங்களில் எங்களோடு சேர்ந்து விளையாடியவள். நாங்கள் மறவோன்களாக அவள் மங்கையானாள். அதுவரை ஆனந்தத் தித்திப்பாய் இருந்தவள் எனக்கு ஆனந்தத் தீயாய் மாறினாள். அவளின் மேல் இன்னவென்று புரியாத அதீத ஈர்ப்புகள் என்னுள் உருவாகத் தொடங்கின. ஆசிரியர்கள் கற்பிக்கும் நேரங்களில்கூட  கரும்பலகையிலிருந்து  என் நயனங்கள் நழுவி அவள் கூந்தலில் சென்று சிக்கெடுக்கத் தொடங்கின. எப்போதுமே நான் ஒருவித கிறக்கத்தில் திரிந்து கொண்டிருந்தேன். இதைப்பற்றி யாருடானவது கதைக்கவேண்டும் போலிருந்தது. என் நம்பிக்கைக்குரியவனாக முகுந்தனே இருந்தான். ஒரு நாள் இன்ரேர்வலுக்கு அவனைத் தனியே அழைத்துச் சென்றேன்.

'மச்சான் நான் உன்னோட கொஞ்சம் கதைக்க வேணும்'

'சொல்லு மச்சான்'

ஏனோ தெரியவில்லை குரல் நடுங்கியது.

'இல்ல மச்சான்... ஆ..னந்தி ல. லலவ்'

'எப்பிடியடா கண்டு பிடிச்ச?'

'எ...என்ன?'

'நான் ஆனந்திய லவ் பண்ணுறன் எண்டு எப்பிடிக் கண்டு பிடிச்ச?'

என் இதயத்திலிருந்து எதையோ யாரோ பிய்த்தெறிவது போல உணர்ந்தேன். கண்களை உடைத்துக் கொண்டு பாய்வதற்குக் கண்ணீர் அருவிகள் துடித்தன. ஓவென்று கத்தி அழ வேண்டும் போலிருந்தது.

'மச்சான் ஆனந்தி அந்தப் பக்கமாப் போறாள். நான் பிறகு உன்னோட கதைக்கிறன் என'.

அன்றைய இரவு முழுவதும் நித்திரையின்றி மனதைப் பிசைந்துகொண்டேயிருந்தது. கண்ணீரருவிகள் கன்னங்களில் கோடிழுத்துக் கொண்டேயிருந்தன. யாருடனும் கதைக்கப் பிடிக்காமல் சில நாட்கள் தனித்தே திரிந்தேன்.

'நான் உனக்கு முதல்லேயே சொல்லேல்லையெண்டு கோபமா? சொறி மச்சான். நீதான் என்ரை லவ்வுக்கு கெல்ப் பண்ண வேணும்'

முகுந்தன் கேட்கையில் என்னால் மறுக்க முடியவில்லை.

சந்தர்ப்பம் பார்த்து ஒருநாள் ஆனந்தியிடம் சென்று நடுக்கத்துடன் முகுந்தனின் காதலைச் சொன்னேன்.

சிரித்தாள்.

'நீங்க சும்மா தானே முகுந்தனைச் சொல்லுறீங்க. கிளாசில நீங்க என்னை அப்பிடிப் பாத்துக் கொண்டிருக்கிறது எனக்கும் தெரியும்'

'இல்லை உண்மையாத் தான். முகுந்தன் தான் உங்களை லவ் பண்ணுறான்'

அவள் வதனம் சுருங்கிப் போவது தெரிந்தது.

'நானும் ஏதோ நீங்க என்ன லவ் பண்ணுறீங்களாக்கும் என்டு நினைச்செல்லோ சும்மா இருந்தன். என்னால இப்ப லவ்வையெல்லாம் நினைச்சுப் பாக்கோலாது. எனக்குப் படிக்க வேணுமாமெண்டு முகுந்தனிட்டச் சொல்லுங்கோ'

அவள் சென்றுவிட எதுவும் புரியாமல் நான் திகைத்து நின்றேன்.

சிலமாதங்களிலேயே எங்கள் பகுதிகளிலும் யுத்தம் பரவ ஒவ்வொருவரும் ஒவ்வொரு திக்கெனப் பிரிக்கப்பட்டோம்.

ஏறத்தாழ பத்து வருடங்களின் பின் 2002 இல் ஆனந்தியை எதிர்பாராத விதமாகக் கிளிநொச்சியில் சந்தித்தேன் முகுந்தனின் காதலியாக, முகுந்தனுடன். அவள் மல்லாவியில் இருப்பதாகவும் முகுந்தனைச் சந்திப்பதற்காக கிளிநொச்சி வந்ததாகவும் முகுந்தன் வெளிநாடு செல்லவிருப்பதாகவும் அறிந்து கொண்டேன். வேலை நிமித்தம்  நான் எனது இருப்பிடத்தைக் கிளிநொச்சிக்கு மாற்றிக் கொண்டேன்

2006 இற்குப்பின்னர் சண்டைகள் உக்கிரமடைந்து தொலைபேசிப் பாவனைகள் சுருங்கிக்கொண்டுவர முகுந்தனுக்கும் ஆனந்திக்கும் தொடர்பாளனாய் நான் மாறிப் போனேன். ஆனந்தியின் தம்பி இயக்கத்தில் இணைக்கப்பட நோயாளிகளான பெற்றோரைப் போஷிக்கும் பொறுப்பு அவளின் தலையில் விழுந்தது. உள்ளுக்குள்ளேயே ஆழஊடுருவும் படைகளின் தாக்குதல்களால் உள்ளூர் போக்குவரத்துகள் ஆபத்தானவையாக மாற எமக்கிடையிலான தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. 

கையில் இருந்தவை எல்லாம் இழந்து நெஞ்சில் வியாபித்திருந்த கனவுகளும் தொலைத்து, முள்ளிவாய்க்காலிலிருந்து சூனியமாகிப் போன மனதுடன் வெளியேற கால்கள் தயங்கிக் கொண்டிருந்த கணத்தில்,

'அண்ணே நான் உங்களோட வரட்டா'

குரல் கேட்டுத் திரும்ப ஆனந்தி தன் தாயுடனும் இரு குழந்தைகளுடனும் நின்றிருந்தாள். அவளுக்கு இன்னும் நான் யார் என்பது புரிந்திருக்கவில்லை. நான் யார் என்பதை அறிய வேண்டிய தேவையும் அவளிடம் காணப்பட்டதாய்த் தெரியவில்லை. தயங்கி நின்றதையே சம்மதமாக எடுத்தவள், என்னுடன் தன் குடும்பத்தையும் இணைத்துக் கொண்டாள். அப்போதுதான் மற்றையவர்களைக் கவனித்தேன் எல்லோரும் குடும்பமாய் இணைந்தே சென்று கொண்டிருந்தனர். ஆங்காங்கே ஷெல் வீச்சுகளினாலும் துப்பாக்கிச் சன்னங்களினாலும் கொல்லப்பட்ட உடல்கள் சிதறிக்கிடக்க,

'கொஞ்சம் பொறுங்கோ அண்ணே வாறன்'

சற்றுத் தள்ளி ஓடியவள் அங்கே கிடந்த ஒரு பெண்ணின் சடலத்தைதப்பிரட்டி எதையோ எடுத்து கழுத்தில் போட்டுக் கொண்டாள். பின் நெற்றியைத் தொட்டு தன் நெற்றியில் பூசிக் கொண்டாள். ஏதும் புரிபடாமல் நின்றேன்.

'அண்ணை குறை நினைக்காதீங்கோ. தனியப் போனா ஆமிக்காரர் ஏதுஞ்செய்து போடுவாங்கள். சேர்ந்து போனாலும் விசாரிப்பாங்கள்.. அதுதான் அந்தத் தாலியையும் எடுத்து நானே போட்டிட்டு குங்குமப் பொட்டையும் எடுத்து வைச்சுக் கொண்டு வாறன். அவங்கள் கேட்டால் என்னை உங்கட மனிசியெண்டு சொல்லுங்கோ. என்ர பேர்..'

'தெரியும், ஆனந்தி'

'உங்களுக்கு எப்பிடி என்னைத் தெரியும்' என்றவாறே என்னை முதன்முதலாக ஏறிட்டுப் பார்த்தாள்.

'ஓ! ஜேந்தன் நீங்களா?'

தலையைக் குனிந்து கொண்டாள்.

'சித்தி எனக்குக் கால் நோகுது. என்னைத் தூக்குங்கோ' என்றது அருகில் இருந்த பெண் குழந்தைகளில் ஒன்று. அதைத் தூக்கியவாறே 

'நீங்க ரெண்டு பேரும் இனி என்ன சித்தி எண்டு சொல்லக்கூடாது. அம்மா எண்டுதான் கூப்பிட வேணும் சரியா. ஆமிக்காரங்கள் கேட்டா இவர்தான் அப்பா எண்டு சொல்ல வேணும். இல்லையெண்டா ஆமிக்காரங்கள் சித்தியை ஏதும் செய்து போடுவாங்கள் சரியா?'

அந்த இரு குழந்தைகளுமே தலையை ஆட்டின. எனக்கும் ஏதோ புரிந்தது போலிருந்தது. அது எனது பாதுகாப்பிற்கும் தேவையாயிருந்தது.

முட்கம்பி முகாமிலும் நாம் கணவன் மனைவியாகவே அறியப்பட்டாலும் நாங்கள் நாங்களாகவே இருந்தோம் என்பதே உண்மை. ஆனால் அதை இந்த சமூகம் எப்படிப் பார்க்கப்போகின்றது என்பதைப் பற்றிய சிந்தனை அப்போது இருந்திருக்கவில்லை. ஒருமாதிரி விடுவிக்கப்பட அடிச்சுப்பிடிச்சு ஒரு ஏஜென்சிக்காரனைப் பிடிச்சு அங்கை இஞ்சை அலைஞ்சு கனாடாவிற்கு வந்து சேர்ந்து நிம்மதிப்பெருமூச்சும் விட்டபின்தான் மனதிற்குள் குற்றவுணர்ச்சி உறுத்தத் தொடங்கியது.

'எங்கள விட்டிட்டுப் போகாதீங்கப்பா' என்று கெஞ்சிய அந்தவிரு குழந்தைகளையோ 'நீயும் எங்களோடையே இருந்தாக் கொஞ்சமாவது தெம்பாயிருக்கும் மோன. நீயும் இல்லையெண்டா நாங்க என்னத்தைச் செய்யப்போறமோ?' என்று கூறிக்கண்ணீர்விட்ட ஆனந்தியின் அம்மாவையோ. எதுவுமே பேசாமல் முகத்தை மறைத்துக் கொண்டு தனித்திருந்து இரவுகளில் விம்மிய ஆனந்தியையோ என்னால் மறக்க முடியவில்லை. ஆனந்தியை அணைத்து அமைதிப்படுத்தி அவர்களுடன் தங்கிவிடவே மனம் விரும்பினாலும் அப்படிச் செய்வது முகுந்தனுக்குச் செய்யும் மிகப்பெரிய நம்பிக்கைத்துரோகமாக அமைந்து விடலாம் என்பதால் என்மனதைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தேன்

விடுதலையாகி வவுனியா வந்த அன்று முகுந்தனைத் தொலைபேசியில் அழைத்து, 'ஆனந்தி' என்று தொடங்கவே 'கேள்விப்பட்டனான் மச்சான், நான் இப்ப வேலையில நிக்கிறன் பிறகு கதைக்கிறன் என்று தொடர்பைத் துண்டித்தவன் அதன் பிறகு எந்தவொரு அழைப்பிற்கும் பதிலளிக்கவில்லை. அவன் என்னத்தைக் கேள்விப்பட்டானோவென்றும் எனக்குத் தெரியாது.

மீண்டும் கைபேசி அழைக்கவே,

என்ன மச்சான் போனைக் கட்பண்ணீற்ற?' 

சொரூபன் கேட்க, 

'இல்லையடா. கவரேஜ் கொஞ்சம் குறைவாயிருக்கு அதுதான். சொல்லு'

'அவன் முகுந்தன் வைச்சிற்றான்ரா. அவனுக்கு நீ ஆனந்தியைப் பற்றிக் கேட்டது பிடிக்கேல்லை. அவள் எப்பையோ இவனுக்குத் தெரியாம கல்யாணம் கட்டி ரெண்டு பெம்பிளைப் பிள்ளைகளும் இருக்காம். அதோட இப்ப அவள் அங்கை அப்பிடி இப்பிடித்தானாம். நீகூட அதை அவனுக்குச் சொல்லேல்லை எண்டு உன்னோடையும் சரியான கோபம். நான் தான் கல்யாண வீட்டுக்கு உனக்கும் சொல்லச் சொல்லி கட்டாயப்படுத்தினனான். வாற சனியை விட்டு அடுத்த சனி அவனுக்கு கல்யாணமடா'

மண்டை விறைக்கத் தொடங்கியது.


Wednesday, June 11, 2014

சொல்லிவிட்ட சொல்




வார்த்தைகள் தடித்து
சுயங்கள் காயமான
தருணத்தில்,

புணர்தலின் உச்சப்பொழுதில்
சீறிப்பாயும் விந்தென
பீறிட்டு வந்த சொல்,

விழுந்து முளைத்து
தழைத்து சடைத்து
சல்பீனியாவாய்

மனக்குட்டைகளில்
ஊறிக்கிடந்த நீரன்பை
மூடி மறைக்குமினி

Friday, June 6, 2014

சொல்லப்படாத சொல்



யுகங்களாய் நீண்டிருக்கும்
எமக்கிடையிலான 
மௌனப் பெருவெளிகளில்
காத்துக்கொண்டேயிருக்கிறோம்

நீ சொல்லுவாயென நானும் 
நான் சொல்லட்டுமென நீயும்

Thursday, May 29, 2014

ஒரு கவிதையின் ஜனனம்


விடலைப் பையனின்
விருப்பக் கனவாய்
அது வந்து என்னிடம் 
தன்னை வனையச் சொன்னது.

அதற்கானவென் சொற்களை
என்றைக்கோ நான் 
கண்கூசும் சூரியவிருட்டில் 
தொலைத்துவிட்டிருந்தேன்

மிகச்சரியான அந்த
ஒற்றை இழையின்றி
யாரால் இயலும்
ஒருகவிதையை நூற்க?

சுரோணிதம் சேராத 
சுக்கிலமென தனக்கான
வார்த்தைகள் இல்லாததால்
வதங்கி அழுதது.

வெளிச்சமில்லாப் 
பெருவெளிகளிலதன்
விசும்பலால் என்னுள் 
மோக விதும்பல்

இறுக்கமாய் நோற்ற
இந்திரிய விரதத்திலும்
கனவின் ஸ்கலிதமென
கசிகிறது இக்கவிதை!


Thursday, February 13, 2014

காதலர் தினம்

கொலை செய்வதென்று தீர்மானித்து கொல்லப்படுவரையும் தேர்ந்தெடுத்தபின்பும் மனதிற்குள் கொஞ்சம் கிலேசமாகத்தான் இருக்கிறது. இன்று நேற்றல்ல ஏறத்தாழ இரண்டு மாதங்களுக்கு முன்பே கொலை செய்வதென்று முடிவெடுத்தாயிற்று. ஆனால் யாரைக் கொலை செய்யலாம் என்பதில் தான் இத்தனை நாட்களை வீணடித்து விட்டேன். கொலை செய்தபின், என்னை மாட்டிவிடக்கூடிய எந்தவொரு தடயத்தையும் விட்டுவைக்கக் கூடாது என்பது தொடங்கி அதைத் தற்கொலையாகக் காட்ட என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பது வரை என்மனதிற்குள் பலவிதமான வழிமுறைகளையும் சிந்தித்தும் எந்தவொரு முடிவிற்கும் வரமுடியாமலிருந்தது. ஆயினும் லிண்டாவிடமிருந்து சற்றுமுன் வந்திருந்த அந்தக் குறுஞ்செய்தி யாரைக் கெலை செய்யலாம் என்கின்ற கேள்விக்கு வழிகாட்டிவிட்டிருந்தது.

Will you let me to be the happiest person in this valentines day?

நாளை பெப்ரவரி 14.

கடந்த சில வாரங்களாகவே லிண்டாவிடம் அந்த மாற்றத்தை நான் அவதானிக்கத் தொடங்கியிருந்தேன். அதற்கு முன்பே கொலை ஒன்றைச் செய்துவிட வேண்டுமென்ற ஆசை மனதிற்குள் மூண்டு விட்டிருந்ததால் அவளது மாற்றங்களை அவதானித்ததை நான் காட்டிக் கொள்ளாமலிருந்தேன். மற்றம்படிக்கு அவளைப் போன்றொரு அப்சரஸை அடைவதற்கு நான் ஏழேழு பிறப்பிலும் பிரம்சரிய விரதம் பூண்டிருந்திருக்க வேண்டும். எனது இப்பிறப்பு முழுமையடைந்து விட்டிருக்கிறது என்பதை அவளைச் சந்தித்த கணத்தில்தான் தான் உணர்ந்து கொண்டேன். அவளைப் போன்றொரு அழகான அம்சமான அணங்கை நீங்கள் முன்னெப்பொழுதும் பார்த்திருக்க முடியாது. இனிமேலும் பார்க்க முடியாது. அது உங்களின் விதி. ஏனெனில் நான் தான் நாளைக்கு அவளைக் கொன்றுவிடப் போகின்றேனே. 

அனைத்துக் காதலர்களும் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நாளை காதலர்தினம் தான் அன்றைய தினத்தில்தான் காதலை யாசித்தவளைக் காதலின் பெயரால் ஏமாற்றிக் கொலை செய்யப் போகின்றேன். நான் ஒன்றும் காதலுக்கு எதிரி கிடையாது. ஆயினும் பாழாய்ப்போன மனதிற்குள் கொலைசெய்தேயாக வேண்டுமென்கின்ற ஆசை, காதல் காம உணர்வுகள் யாவற்றையும் விஞ்சி நிற்கையில் மனிதநேயம் பற்றியெல்லொம் துளிகூட நினைத்துப் பார்க்க முடியாது. புரிகிறது உங்கள் குழப்பம். இப்படியும் ஒருத்தன் இருக்க முடியுமா என்று. விசுவாமித்திரரையே மேனகையால் காமுறச் செய்ய முடியுமென்றால் நான் எம்மாத்திரம்? அதற்காக என் ஆண்மையிலோ அல்லது அவள் கவர்ச்சியிலோ சிறிதும் சந்தேகம் வேண்டாம். 

நீங்கள் அரேபியக் குதிரைகள் பார்த்திருக்கிறீர்களா? அதிலும் மண்ணிறத்தில் ஒலிவ் எண்ணெய் விட்டு மினுக்கிய உரோமத்துடன் வாளிப்பாய், பார்த்தால் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் அந்த வனப்பை கண்டிருக்கிறீர்களா. இப்போது அப்படியே அந்த வாளிப்பை ஒரு வெள்ளையினப் பெண்ணிடம் கற்பனை செய்து பாருங்கள். பொதுவாக வெள்ளையினப் பெண்களில் வாளிப்பான உடல்வாகு கொண்டவர்களை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள். வெள்ளையினத்தில் விதிவிலக்காய் இவள் மட்டும் தன் தந்தையின் சேர்பிய ஜீனிலிருந்து அதைப் பெற்றிருந்தாள். அமெரிக்க சேர்பியக் கலப்பினில் உருவான அந்த அபூர்வ அழகியை கண்டால் எந்த ஆடவனும் ஒருதடவை ஆடித்தான் போவான். அப்படிப்பட்ட அந்த அதிசய நாரி நேரங்கெட்ட நேரத்தில் என்னிடம் தன் காதலைச் வெளிப்படுத்தியிருக்கிறாள்,


எல்லாவற்றிற்கும் ஒரு நேரங்காலம் வேண்டுமென்று சொல்வார்கள். அது என் விசயத்தில் எப்படியெல்லாம் விளiயாடுகிறது. இப்போது மட்டும் நான் சாதாரண மனநிலையிலிருந்திருந்தாலும் அவளின் கோரிக்கையை என்னால் பூர்த்தி செய்திருக்கமுடியாது என்பது என்னவொரு முரண். ஆம் அப்போது அவளல்ல நான் தான் உலகிலேயே மிகவும் மகிழ்ச்சி கூடிய மனிதனாக இருந்திருப்பேன். பிறகென்ன மயிருக்கு, அவளைக் கொலை செய்யப் போகிறேன் என்கிறீர்களா?  அதற்கும் அவள்தான் காரணம். சொல்கிறேன். எல்லாவற்றையும் சொல்கிறேன். நீங்கள் யாருக்கும் சொல்லிவிடமாட்டீர்கள் என்கின்ற நம்பிக்கையில் சொல்கிறேன். அவளுடன் பழகிய இந்த ஆறு மாதங்களில்தான் கொலை செய்யவேண்டுமென்கின்ற விஷநச்சு என்னுள் விதையாக விழுந்து இன்று வேர்விட்டு விழுதுவிட்டு ஆலமரமாகி என் மூளையின் ஒவ்வோர் கலங்களிலும் வியாபித்து நிற்கிறது.

அதுவரை கணினிகளின் மென்பொருளுக்கு நிரலி எழுதி எழுதி எழுதிக்  களைத்துக் கொண்டிருந்த நான் அதில் ஏற்பட்ட சலிப்பில் வேறு வேலை கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்த பொழுதில் எல்லா வேலைவாய்ப்பு முகவர் இணையத்தளங்களிலும் எனது சுயவிபரக் கோவையை தரவேற்றியிருந்தேன். லிண்டாவின் விதி அவளது மேலாளர் கண்ணில் என் விபரம் அகப்பட்டது. சுருக்கமாகச் சொன்னால் அதுவொரு வெளித்தெரியாத ஆராய்ச்சி நிறுவனம். அவர்கள் ஆராய்ச்சி பற்றி வெளியே மூச்சுக்கூட விடமுடியாது. எனது பின்புலம் பற்றிய நீண்ட ஆய்வின் பின்னர் வேறு நிறுவனம் ஒன்றின் பெயரில் ஒப்பந்த அடிப்படையில் உள்வாங்கப்பட்ட நான் லிண்டாவின் ஆராய்ச்சிக்கு நிரலி எழுதும் பணியில் அமர்த்தப்பட்டேன். ஆராய்ச்சி பறறிய விபரங்கள் வெளியே கசிந்துவிடாபடி எத்தனையோ பாதுகாப்பு நடவடிக்கைகள். எனது மென்பொருள் தயாராகும் வரை நான் வெளிநபர்கள் யாரையும் சந்திக்க முடியாது. ஏறத்தாழ வீட்டுக்காவலில் தான் இருந்தேன். தேவையான அத்தனை வசதிகளும் செய்து தரப்பட்டிருந்தன. சட்டியிலிருந்து அடுப்புக்குள் விழுந்த கதையாகி விட்டிருந்தது என் நிலமை. அதிக சம்பளமும் தேவையாயிருந்த வேலைத்தள மாற்றமும் என்னை இங்கே கொண்டுவந்து தள்ளியிருந்தாலும் பாலைவனத் தென்றலாய் லிண்டாவின் அருகாமை அவை அனைத்தையும் மறக்கடித்துக் கொண்டிருந்தது. ஆரம்பத்தில் ஏற்பட்டிருந்த கசப்பான பாதுகாப்புக் கெடுபிடிகளை அடுத்து அவளுடன் நெருங்கவே அஞ்சியிருந்தேன். எல்லா இடங்களிலும் நான் கண்காணிக்கப்படுவதை உணர்ந்திருந்தாலும் அவளின் அருகாமை என் மனதிற்கு இதமாக இருந்தது. 

என்னை ஒத்த நிலையிலேயே அவளும் இருந்திருப்பாள் போலும். தானாகவே வந்து என்னுடன் உரையாடத் தொடங்கினாள். என்னைப் போலவே அவளுக்கும் உறவென்று சொல்லிக் கொள்வதற்கு யாரும் இருக்கவில்லை. அவளுடன் பழகுவதே ஒரு சித்திரவதை. உணவை அருகினில் வைத்துக் கொண்டு அதை உண்ணமுடியாமலிப்பது சித்திரவதையன்றி வேறென்ன? வந்த தொடக்க காலத்திலேயே ஒவ்வோரிடத்திலும் நான் கண்ணகாணிக்கபடுவதை உணர்ந்துவிட்டிருந்தேன். அத்துடன் இங்கே வேலைசெய்பவர்கள் முகங்களில்கூட மகிழ்ச்சியை நான் கண்டதில்லை. பெரும்பாலானவர்களும் இயந்திரங்களைப் போலவே வேலை செய்து கொண்டிருந்தார்கள். அதனால் என்னுள் இனம் புரியாதவொரு அச்சமும் வியாபித்திருந்தது. அப்படியில்லையெனில் எப்போதோ லிண்டாவை ...

ம்ம்ம்...விடுங்கள். அதற்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டும். அவள் மேல் ஏற்பட்டிருந்த காமம் காதலாகிக் கொண்டிருந்த சமாந்தர காலத்தில் அங்கே நடக்கின்ற ஆராய்ச்சிகள் பற்றிய விபரங்களை நான் ஓரளவிற்கு ஊகித்துக் கொள்ளவும் ஆரம்பித்திருந்தேன். அந்த ஊகத்தை உறுதி செய்தவுடன் அதிர்ந்து போய் விட்டேன். அதைச் சொல்லி உங்களுக்குப் புரிய வைக்க என்னால் முடியாது. சொன்னால் என்னை விசரன் என்பீர்கள். அதிக மன அழுத்தம் ஏற்பட்டதால் பிதற்றுகிறேன் என்பீர்கள். ஆனால் இன்னும் பலபத்து வருடங்கள் கழித்து அப்போது வருகின்ற சந்ததிக்கு அது புரியக் கூடியதாகவிருக்கும். அதனால் சுருக்கமாவே சொல்லி விடுகிறேன். 

நம்பினால் நம்பங்கள். அவர்கள் அங்கே வெள்ளெலிகளைக் கொன்று அவற்றின் உயிரிலிருந்து சக்தி எடுப்பதற்குப் பரீட்சித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏறத்தாழ அவர்களது பரிசோதனை வெற்றியடைந்து விட்டிருந்தது. இப்போது அவர்கள் அதைப் பன்றி ஒன்றில் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் வெற்றியடைந்தால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் கதைதான். உணவிற்காக உடலையும் சக்தித் தேவைக்காக அவற்றின் உயிரையும் பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த உயிர்ச் சக்தியை அளவிடும் மென்பொருளைத் தயாரிப்பதில்தான் நான் ஈடுபட்டு கடந்தவாரம் அது வெற்றிகரமாக முடிக்கப்பட்டிருந்தது.

அவர்களின் பரிசோதனை பற்றி எனக்குத் தெரிந்திருப்பதை ஏதோவொரு மயக்கப் பொழுதில் லிண்டாவிடம் தெரிவித்திருந்தேன். எனது அறிவுத் திறனை மெச்சியவள் என்னில் மயங்கத் தொடங்கியது அன்றிலிருந்துதான். நாளையுடன் எனது பணி ஒப்பந்தம் நிறைவடைகிறது. அதற்குள் ஒர் மனித உயிரின் சக்தியை அளந்துவிடவேண்டுமென்கின்ற ஆவல்தான் சந்ததியைப் புதுப்பிக்க வேண்டுமென்கின்ற இயல்பான உயிரியல் உந்துதலையும் மீறி அவளைக் கொலை செய்யுமாறு என்னைத் தூண்டிக்கொண்டிருக்கிறது. நாளையை விட்டால் அதற்குப் பின் எனக்கு அதற்குச் சாத்திமில்லாமல் போய்விடும். இன்றைய இரவிலேயே அதைச் செய்து பார்த்து விட்டால்.................

Why not? we both will be the happiest couple in the world since this midnight

செய்தியை அனுப்ப. உடனடியாகவே அவளிடமிருந்து பதில் வந்தது

Sure, come to the lab at exactly 12.00. you will hve a surprize too

காதலையும் கொன்று காதலியையும் கொல்ல வேண்டியிருக்கின்றதே என்கின்ற தயக்கம் இருந்தாலும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பரிசோதனையை நானே செய்துவிடவேண்டுமென்கின்ற பேராசையில் ஆய்வகத்திற்கு விரைந்தேன்.

காத்திருந்தாள் கன்னி, மனதிற்குள் ஊற்றெடுத்த உணர்ச்சிகளை கவிதைகளாய்ச் சொல்லில் வடிக்கமுடியவில்லை. கட்டியணைத்து முத்தமிட ஆரம்பித்தாள். 

போகட்டும் சாகப் போகிறவள் இன்பத்தைக் கொஞ்சம் அனுபவித்துவிட்டுச் சாகட்டும் என்று நினைத்தேன். அவள் பிடி இறுகியது. கள்ளி இவ்வளவு ஆசையை என்மீது வைத்திருக்கிறாளே என்று பெருமையாக இருந்தது. அந்தளவிற்கு என்னை இறுக்கினாள் மேலும் இறுக்கினாள். மேலும் மேலும் இறுக்கிக்கொண்டே போனாள். முடியாது. இதற்குமேல் தாங்காது என்கின்ற நிலையயை நான் எப்போதோ அடைந்து விட்டிருந்தேன்.

இவ்வளவு பலசாலியாக இருக்கிறாளே. இவள் பெண்தானா என்கின்ற சந்தேகம் எழுந்தது. அவள் கரங்களில் பெண்மைக்குரிய மென்மை இல்லை. மார்பகங்கள் மெத்தென்று இருக்கவில்லை.முத்தமிட்டு நாக்கைச் சுழற்றித் துழாவியபோது தித்திக்கவில்லை. எல்லாமே என் எதிர்பார்ப்பிற்கு எதிர்மாறாகவே இருந்தன. இவள் பெண்ணில்லை. இவள் இவளல்ல. இது.!!!!! மனதுக்குள் பயம் வந்து குந்திக் கொண்டது.

என்னை அப்படியே தூக்கிக் கொண்டு பரிசோதனை இடத்தை நோக்கி நடந்தது. என்னைக் கீழே விட்டுவிடச் சொன்னேன். பதிலில்லை. கெஞ்சினேன் பதிலில்லை. என்னைக் கொண்டு சென்று அகண்ட அந்தப் பரிசோதனைக் குழாயினுள் பொருத்தும் போது தான் உறைத்தது. 

என்னையா?